சனி, ஞாயிறு லீவு.. எலெக்சன் ரிசல்ட் வேற.. டாஸ்மாக்கில் வேறலெவல் கலெக்சன்... சென்னைதான் டாப்
சென்னை: தமிழகத்தில் இன்றும் நாளையும் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரமாக உள்ளதால் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் மதுபானங்களை அங்கே அமர்ந்து பருகும் வசதி உள்ள அனைத்து பார்களும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மதுபானக்கடைகள் மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. மது விற்பனை நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

குவிந்த வசூல்
கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் டாஸ்மாக் கடைகளை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மூட வேண்டும் என்று அண்மையில் அரசு உத்தரவிட்டது.
அதன்படி இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிறு) மதுக்கடைகள் மூடப்படுகின்றன. 2 நாட்கள் மதுக்கடைகள் மூடப்படுவதால், நேற்று மதுக்கடைகளில் கூட்டம் வழக்கத்திற்கு மாறாக அலைமோதியது.

தேர்தல் முடிவுக்காக கட்சியினர்
மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை நீண்ட வரிசையில் நின்று மதுபானங்களை பெட்டி பெட்டியாக பலர் வாங்கி சென்றனர். நாளை தேர்தல் முடிவு வெளியாக இருப்பதால் அரசியல் கட்சி தொண்டர்கள், அதனை கொண்டாடும் வகையில் மதுபானங்களை அதிக அளவில் வாங்கி குவித்தனர்.

ஒரே நாளில் ரூ.292 கோடி
இதனால் சென்னை உள்பட அனைத்து நகரங்களிலும் நேற்று டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தைவிட மது விற்பனை அதிகரித்தது. வழக்கமாக தினமும் ரூ.120 கோடிக்கு மது விற்பனை நடைபெறும். ஆனால் நேற்று ஒரே நாளில் ரூ.292 கோடிக்கு மது விற்பனை ஆகி இருந்தது.

திருச்சி 2ம் இடம்
தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் அதிகபட்சமாக ரூ.63.44 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகி உள்ளதாம். அதற்கு அடுத்தபடியாக திருச்சி மண்டலத்தில் ரூ.56.72 கோடியும், சேலம் மண்டலத்தில் ரூ.55.93 கோடி யும், மதுரை மண்டலத்தில் ரூ.59.63 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ.56.37 கோடியும் மது விற்பனை நடந்திருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications