நானும் 10 ஆண்டு அமைச்சராக இருந்திருக்கேன்.. பேச விடுங்க குருவே.. செல்லூர் ராஜூவால் அவையில் சிரிப்பலை
சென்னை: பேச நேரம் கொடுங்கள் குருவே என சபாநாயகரிடம் எம்எல்ஏ செல்லூர் ராஜூ வேண்டி கேட்டுக் கொண்டதை அடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.
சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று மதுரையில் பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டுவதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக எம்எல்ஏவுமான செல்லூர் ராஜூ தெரிவித்திருந்தார்.
அப்போது இதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதில் அளித்தார். அவர் கூறுகையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசும் போது குறுக்கிட வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

கருத்து தவறானது
ஆனாலும் உறுப்பினர் கூறிய கருத்து தவறாக இருப்பதால் குறுக்கிட வேண்டிய நிலை உள்ளது. நூலகம் அமைய உள்ள இடத்தில் பென்னிகுவிக் வாழ்ந்ததாக கூறுவது தவறான கருத்து. பென்னிக்குவிக் இறந்தது 1911 ஆம் ஆண்டு. இந்த கட்டடம் கட்டப்பட்டது 1912 ஆம் ஆண்டு. எனவே அது பென்னிகுவிக் இல்லமாக இருந்திருக்க முடியாது.

தவறான கருத்தை பதிவிடாதீர்
உறுப்பினர் தவறான கருத்தை பதிவு செய்யக் கூடாது. அந்த இடத்தில் பென்னிகுவிக் வாழ்ந்ததற்கான ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என பிடிஆர் தெரிவித்திருந்தார். இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பென்னிகுவிக் இல்லத்தை இடித்துவிட்டு கருணாநிதி நூலகம் கட்டப்படவில்லை. ஆதாரம் இருந்தால் சொல்லுங்கள். இந்த அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுத்து மாற்ற தயாராக இருக்கிறது.

இன்னாள் எம்எல்ஏ
இரண்டு முறை அமைச்சராக இருந்து தற்போது எம்எல்ஏவாக உள்ள செல்லூர் ராஜூ போன்ற மூத்த உறுப்பினர்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் தவறான தகவலை அவையில் கூறக் கூடாது என்றார் ஸ்டாலின். அப்போது கடந்த ஆட்சியில் பயிர்க் கடனில் முறைகேடு நடந்ததாக திமுக எம்எல்ஏக்கள் குற்றம்சாட்டினர்.

பயிர்க் கடன்
அதற்கு பதிலளித்த செல்லூர் ராஜூ, அதெல்லாம் தவறு. பயிக் கடனில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை என பதில் அளித்துக் கொண்டிருந்த போது சபாநாயகர் குறுக்கிட்டார். அதற்கு செல்லூர் ராஜூ, நானும் 10 ஆண்டுகள் ஒரே துறையில் அமைச்சராக இருந்தேன். பேச நேரம் கொடுங்கள் குருவே என சபாநாயகர் அப்பாவுவிடம் செல்லூர் ராஜூ வேண்டியதை அடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications