தவெக கூட யாருங்க பேசினா.. காங்கிரஸ் கேட்பதை ஸ்டாலின் கொடுப்பார்.. செல்வப்பெருந்தகை பரபர விளக்கம்
சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள், பிரச்சாரம் ஆகியவற்றால் அரசியல் களத்தில் உச்சகட்ட பரபரப்பு நிலவி வருகிறது. திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இணைந்தாலும் காங்கிரஸ் கட்சி குட்டையை குழப்பி கொண்டிருக்கிறது. திமுக சொல்லும் 25 தொகுதிகள் போதாது. தவெகவை குறைத்து மதிப்பிட முடியாது என தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார். இது குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில் செல்வப்பெருந்தகை பரபரப்பு விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், "எல்லா தேர்தல்களிலும் கூட்டணி பேச்சுவார்த்தை இப்படித்தான் இருக்கும். எல்லா கட்சிகளுமே கூடுதல் சீட்கள் கேட்பது இயல்பு. இறுதியாக அது முடிவு செய்யப்படும். இந்த முறையும் அது சுமூகமாக நிறைவேறும். நாங்கள் கூடுதல் இடங்களை கேட்பது உண்மை. அவர்களும் எங்கள் கேட்பதை நல்லபடியாக கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் (Selvaperunthagai).

சிறிய கட்சிகளே அதிகம் கேட்கறாங்க
இதில் பிரச்சனையோ, விவாதமே, குழப்பமோ எதுவும் இல்லை. தற்போதைய நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை சிறப்பாக மகிழ்ச்சியாக போய் கொண்டிருக்கிறது. திமுக - காங்கிரஸ் இந்தியா கூட்டணி மிகவும் இயற்கையானது. கொள்கை ரீதியாக உருவான கூட்டணி. இங்கு கருத்து வேறுபாடு என்பதே இல்லை. தேர்தலில் சிறிய சிறிய கட்சிகளே அதிக இடங்கள் கேட்கிறார்கள்.
திமுக காங்கிரஸ் கூட்டணி
எங்களுக்கு என்ன தேவையோ அதை கேட்போம். முதலமைச்சர் ஸ்டாலின் அதை பரிசீலனை செய்வார். திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை. சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு தேர்தலின்போதும், எங்கள் டெல்லி தலைவர்கள், தமிழ்நாடு அரசியல் களம், மக்கள் என்ன நினைக்கிறார்கள், கூட்டணி உள்ளிட்டவற்றை கேட்பது ஆய்வு செய்வார்கள்.
தவெக பற்றி விளக்கம்
இந்த தேர்தல் பணிகள் மிகவும் சகஜமானவை. நாங்கள் தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தவெகவுடன் பேசினோம் என யார் சொன்னார்கள். நான் தான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர். நான் தவெகவுடன் பேசவில்லை. எனக்கு அங்கு யாரையும் தெரியாது. நேரடியாகவோ, மறைமுகவாகவோ தவெகவுடன் பேச்சுவார்த்தை நடத்த சொல்லி தேசிய தலைமை எந்த வழிநடத்துதலும் கொடுக்கவில்லை.
திமுக கூட்டணியில் தான்..
காங்கிரஸ் கட்சி வரலாற்று சிறப்புமிக்கது. 140 வருடங்கள் பழமையான கட்சி. எங்களுக்கு பின் வாசலில் பேச்சுவார்த்தை நடத்தும் பழக்கம் எப்போதும் இருந்ததில்லை. எதுவாக இருந்தாலும் நேரடியாக பேசித்தான் பழக்கம். எங்களுக்கு என்ன வேண்டும் என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக தான் பேசுவோம். இதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது. நாங்கள் திமுக கூட்டணியில் தான் தொடர்கிறோம்" என்றார்.












Click it and Unblock the Notifications