அமலாக்கத்துறைக்கு செக்! தமிழக சட்டசபையை கூட்டி கண்டன தீர்மானம் கொண்டு வரணும்! காங்கிரஸ் புது ஐடியா!
சென்னை: அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, சிபிஐ, போன்ற விசாரணை அமைப்புகளை பழிவாங்குவதற்கு மட்டுமே பா.ஜ.க. அரசு பயன்படுத்துவதாகவும் தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி ஒரு கண்டன தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் காங்கிரஸ் சட்டசபைக் குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஒன்பது ஆண்டுகளில் 3,500-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது என்றும் இதில் ஆயிரம் வழக்குகளில் கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

''தன்னாட்சி பெற்ற விசாரணை அமைப்புகளான அமலாக்கத்துறை, வருமானவரித் துறை, மத்திய புலனாய்வுத்துறை ஆகியவற்றை எதிர்கட்சியினரை பழிவாங்குவதற்கு மட்டுமே பா.ஜ.க. அரசு பயன்படுத்துகிறது. பா.ஜ.க.வை எதிர்க்கின்ற அனைத்துக் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் வீட்டுக்குள்ளேயும் பா.ஜ.க.வின் துணை அமைப்புகள் சோதனை நடத்தி விட்டார்கள். அரசியல் பிரமுகர்கள் மட்டுமின்றி பா.ஜ.க.வினரை எதிர்த்து கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.''
''தமிழ்நாட்டில் சமீபத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு சொந்தமான இடங்களில் அடுத்தடுத்து அமலாக்கத்துறையினர் சோதனை, விசாரணை என்ற பெயரில் மிகுந்த மனஉளைச்சலையும், உடல் நலக்குறைவையும் ஏற்படுத்தியுள்ளனர். விசாரணை அமைப்புகளை ஏவி, பாசிசப் போக்குடன் செயல்படும் ஒன்றிய அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன். ''
''இதுபோன்ற நடவடிக்கைகளால் தி.மு.க.வை மிரட்டி பணிய வைக்கப் பார்க்கின்றது ஒன்றிய அரசு. ஆனால், அது ஒருபோதும் நடக்காது. தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநரோ, ஊழலற்ற அரசு அமைய வேண்டுமென்று பேசிக் கொண்டு, ஊழல் செய்த அமைச்சர்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்க ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருக்கிறார். ''
''கடந்த ஒன்பது ஆண்டுகளில் 3,500-க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியிருக்கிறது. இதில் ஆயிரம் வழக்குகளில்கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்பதும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. 50 தனிநபர்கள் அல்லது நிறுவனங்கள் மீதுகூட இன்னும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. தண்டனை பெற்றவர்கள் 30 பேர்கூட இல்லை. எனவே, பாஜக ஆட்சியில் நடைபெறும் சோதனைகளின் நோக்கத்தை கேள்விக்குட்படுத்துவது அவசியமாக இருக்கிறது.''
''விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சியினரை பழிவாங்கும் நோக்கத்தோடு எதேச்சதிகாரமாக செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டிக்கும் விதமாக தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் உடனடியாக சட்டப்பேரவையைக் கூட்டி, ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டனத் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.''












Click it and Unblock the Notifications