“ஏப்ரல் 24 காலை 11 மணிக்கு ஆதாரங்களை வெளியிடுவேன்” - ஐ.டி ரெய்டு குறித்து செல்வப்பெருந்தகை பேட்டி
சென்னை: சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்திருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்துள்ளார். ஏப்ரல் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வருமான வரித்துறை சோதனை தொடர்பான முழு ஆதாரங்களை வெளியிடுவேன் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வீட்டில், நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. அதைத் தொடர்ந்து, 'சீருடை இல்லாமல் வருமான வரித்துறையினர் என, சொல்லிக் கொண்டு, இந்தி பேசும் நபர்கள், தன் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், ராகுல் பிரசாரத்திற்கு செல்ல முடியாத வகையில் தடுக்கப்பட்டதாகவும் செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டினார்.

ஆனால்,'செல்வப்பெருந்தகை கூறியது போல், அவரது வீட்டில் சோதனை எதுவும் நடத்தவில்லை' என, வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 20 ஆம் தேதி அன்றோ அல்லது அதற்கு சமீபத்திய தேதிகளிலோ செல்வப்பெருந்தகைக்கு எதிராக வருமான வரித்துறையினரால் எந்தவிதமான சோதனையோ ஆய்வோ அல்லது அமலாக்க நடவடிக்கைகளோ மேற்கொள்ளப்படவில்லை, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லம் உட்பட எந்தவொரு இடமும், வருமானவரித் துறையின் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படவில்லை என வருமான வரித்துறை விளக்கம் அளித்தது.
இது தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "ராகுல் காந்தி பேச்சை தவறுதலாக செல்வப்பெருந்தகை மொழிபெயர்த்ததால், அவர் பிரசாரத்திற்கே வரக்கூடாது என ராகுல் கூறியுள்ளார். அதை மறைக்க, செல்வப்பெருந்தகை நாடகம் ஆடுகிறார்' என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
செல்வப்பெருந்தகை வீட்டில் சோதனை நடத்தவில்லை என வருமான வரித்துறை மறுத்திருந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், நான் தங்கியிருந்த இடம், அலுவலகங்களில் திடீர் சோதனை நடைபெற்றது உண்மைதான். ஏப்ரல் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வருமான வரித்துறை சோதனை தொடர்பான முழு ஆதாரங்களை வெளியிடுவேன் எனக் கூறியுள்ளார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாட்டில் பரப்புரை மேற்கொள்ள இருந்த நேரத்தில் என்னை அரசியல் ரீதியாக முடக்குவதற்காகவே சோதனைகள் நடத்தப்பட்டன. ஆனால் வருமான வரித்துறை அதிகாரிகள் இதனை முற்றிலும் மறுத்தனர். ஜனநாயகத்தின் மீது எனக்கு உள்ள நம்பிக்கையுடன் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர உறுதியாக இருக்கிறேன் என்றும் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.














Click it and Unblock the Notifications