மோடி, அமித்ஷாவுக்கு அப்புறம்தான் எம்ஜிஆர், ஜெயலலிதாவா? செங்கோட்டையன் அறிக்கையால் கொதித்த அதிமுகவினர்
சென்னை: பிரதமர் மோடி, அமித்ஷாவுக்கு பின் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா பெயரை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் செங்கோட்டையன். செங்கோட்டையனை பாஜக தலைமை இயக்குவதாக எழுந்து வரும் தொடர் விமர்சனங்களுக்கு மத்தியில் மோடி மற்றும் அமித்ஷாவை புகழ்ந்து செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளது அதிமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைத்து, அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று 10 நாட்கள் கெடு விதித்து, கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி பேசியிருந்தார். இதனால் கோபமடைந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கினார்.

செங்கோட்டையன் பதவி பறிப்பு
செங்கோட்டையன் ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளும் பறிக்கப்பட்டன. செங்கோட்டையனின் கட்சி பதவி பறிப்பை கண்டித்து அறிக்கை வெளியிட்ட, எதிர்ப்பு தெரிவித்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியை விட்டு நீக்கப்பட்டு வருகின்றனர். அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்று செங்கோட்டையன் கூறிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம் இதற்கு முழு ஆதரவை தெரிவித்தார்.
அதிமுகவில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கும் நிலையில் செங்கோட்டையன் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டார். டெல்லி புறப்படும் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தபோது ஹரித்வாருக்கு பயணம் மேற்கொள்வதாக தெரிவித்தார் செங்கோட்டையன். ஆனால், அன்று இரவே மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டுக்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார் செங்கோட்டையன்.
அமித் ஷாவை சந்தித்த செங்கோட்டையன்
டெல்லியில் இருந்து திரும்பியதும் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்து அரசியல் சூழல் குறித்து விவாதித்ததாக தெரிவித்தார். மேலும், ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தெரிவித்தார். அதிமுக வலிமை பெற உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரின் ஒத்துழைப்போடு மக்கள் பணிக்காக தொடர்ந்து போராடுவேன் என செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

பாஜக தலைமையின் ஆலோசனைப்படியே செங்கோட்டையனின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் இனி அவருடைய அடுத்தடுத்த செயல்பாடுகளும் பாஜக அறிவுறுத்தலின்படியே நடக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில் செங்கோட்டையனின் செயல்பாடுகள் அமைந்து வருகின்றன. சிபி ராதாகிருஷ்ணன், துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது லெட்டர்பேடில் அறிக்கை வெளியிட்டுள்ளார் செங்கோட்டையன்.
மோடி, அமித் ஷாவுக்கு புகழுரை
கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.செங்கோட்டையன் என்ற பெயரில் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை புகழ்ந்துள்ள செங்கோட்டையன், அதன் பிறகே எம்ஜிஆர், ஜெயலலிதா பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான செங்கோட்டையன், பாஜகவை தூக்கி வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளதை அதிமுகவினரே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
செங்கோட்டையன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்றைய உலக தலைவர்களில் முதன்மையானவராக திகழும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களாலும், இந்திய திருநாட்டின் இன்றைய இரும்பு மனிதராக திகழும் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களாலும் முன்மொழியபட்டவரும், இதயதெய்வம் புரட்சித் தலைவர், இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் அன்பை பெற்றவரும், நம் தமிழ்தேசத்தின் தனிபெரும் தலைவர் மேதகு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள் வேற்றுமையில் ஒற்றுமை காணும் பாரத திருநாட்டின் துணை குடியரசு தலைவராக தேர்வு பெற்று உள்ளது இந்நாட்டின் பொன்னேட்டில் எழுதப்படும் திருநாள் ஆகும். தன் பணிகாலத்தில் இந்திய தேசத்தை உயரத்திற்கு எடுத்து செல்ல மனம்கனிந்த நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications