புயலுக்கு பின் அமைதி! செங்கோட்டையனை ஆஃப் செய்தது யார்? புட்டு வைத்த புகழேந்தி!
சென்னை: "ஒருங்கிணைந்த அதிமுக" என முழங்கிய செங்கோட்டையன், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் டெல்லி பயணத்திற்கு பிறகு அமைதியாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்து புகழேந்தி தெரிவித்துள்ளார். அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மோதல் போக்கை கொண்டிருக்கிறார். அத்திக்கடவு - அவிநாசி திட்ட பாராட்டு விழா பேனரில் முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாமல் எடப்பாடி புகைப்படம் மட்டும் இருந்ததால் செங்கோட்டையன் அதிருப்தி அடைந்து இந்த பிரச்சினையை பொதுவெளியில் எழுப்பியிருந்தார்.

இதைத் தொடர்ந்து எடப்பாடியுடன் ஒட்டியும் ஒட்டாமலேயே செங்கோட்டையன் இருந்தார். செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. சட்டசபையில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது குறித்த ஆலோசனை கூட்டத்திலும் அவர் பங்கேற்கவில்லை.
செங்கோட்டையன்
இந்த நிலையில் செங்கோட்டையன் கடந்த 5ஆம் தேதி மனம் விட்டு பேச போவதாக அறிவித்திருந்தார். அதில் அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை கட்சியில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடுவையும் விதித்தார்.
பதவி பறிப்பு
இதற்கு எடப்பாடி பழனிசாமி செவிசாய்க்காமல், செங்கோட்டையனின் கட்சி பதவியை பறித்தார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரச்சாரம் மேட்டூரில் நடந்த போது அந்த கூட்டத்தையும் புறக்கணித்தார். அது போல் அவர் ஈரோடுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வந்த போது செங்கோட்டையனோ சைலண்ட்டாக சென்னைக்கு வந்துவிட்டார்.
டெல்லி பயணம்
இந்த நிலையில் செங்கோட்டையனின் பதவி பறிபோன சில நாட்களிலேயே அவர் டெல்லியில் உள்ள மூத்த தலைவர்களான அமித்ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். இவ்வாறு இவர்களின் அடுத்தடுத்த சந்திப்புகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.
கனிமொழி விமர்சனம்
அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித்ஷா வீட்டில் இருப்பதாகவும் எந்த பஞ்சாயத்தாக இருந்தாலும் அங்கு போய் பேசிக் கொள்வதாகவும் திமுக எம்பி கனிமொழி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த செங்கோட்டையன் அடுத்து என்ன செய்ய போகிறார் என ஆவலுடன் இருந்த நிலையில் அவரோ அமைதியின் உருவமாக இருக்கிறார்.
மறுத்த செங்கோட்டையன்
இந்த நிலையில் ஓபிஎஸ், டிடிவி தினகரனை அவர் சந்தித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அதை மறுத்துள்ளார். இந்த திடீர் அமைதிக்கு என்ன காரணம் என்பது குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி பெங்களூர் புகழேந்தி ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக செங்கோட்டையன் பேசிய பின்னர் அவரை வீட்டில் போய் சந்தித்தேன்.
யானை பலம்
அவருடைய பலம் யானை பலமாகத்தான் இருக்கும் என நினைத்தேன். ஆனால் செங்கோட்டையனை அழைத்த அமித்ஷா , அவரை அமைதியாக இருக்கும்படி தெரிவித்துள்ளார். "அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம்" என கூறியிருந்த அமித்ஷா, செங்கோட்டையனை பொறுமை காக்குமாறு கூறி அனுப்பியுள்ளார்.
வேகம் இல்லை
அவருடைய வேகமும் தற்போது குறைந்துவிட்டது. இதனால்தான் கெடு முடிந்து 10 நாளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் செங்கோட்டையன் அமைதி காத்து வருகிறார். இந்த திட்டம் எல்லாம் டெல்லியில் இருந்து செயல்படுத்தப்படுகிறது. அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இரவு 8 மணி முதல் 9 மணி வரை அங்குதான் அதிமுக பணிகள் நடக்கின்றன" என்று புகழேந்தி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications