’தங்கத்த’ தூக்கிட்டு வாங்க.. தீர்மான குழுவில் புறக்கணிப்பு! எடப்பாடி மீது ஏக கடுப்பில் சீனியர் மாஜி!
சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கிறார். தொடர்ந்து அதிமுகவிலிருந்து அதிருப்தியில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்களை தமிழக வெற்றி கழகத்தில் அவர் இணைய வைக்க முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுகவின் மிக முக்கிய முகங்களில் ஒருவரான தங்கமணி அதிமுக பொதுக்குழு தீர்மான குழுவில் இடம் பெறாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தங்கமணியும் அவரது ஆதரவாளர்களும் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு புது பிரச்சனை முளைத்துக் கொண்டே வருகிறது. ஓபிஎஸ் தர்மயுத்தம், சசிகலா டிடிவி தினகரன் நீக்கம் என அடுத்தடுத்து பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தது.
இந்த நிலையில் சமீபத்திய மிகப்பெரிய அரசியல் பிளவ் என்றால் அது செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதுதான். கோபிசெட்டி பாளையத்தில் மட்டும்தான் அவருக்கு செல்வாக்கு என அதிமுகவினர் சொன்னாலும் 9 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட செங்கோட்டையன் தமிழகம் அறிந்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்பதை மறுக்க முடியாது.

செங்கோட்டையன்
எம்ஜிஆர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் முக்கியத்துவம் வாய்ந்த தலைவராக செங்கோட்டையன் இருந்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி முதல்வராவதற்கும் செங்கோட்டையனும் ஒரு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2021 சட்டமன்ற தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்த நிலையில் கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
அரசியல் பிளவு
அதே கோரிக்கையை முன்வைத்து பேசிய செங்கோட்டையன் தற்போது அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். அதே கையோடு நேராக தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்து இருக்கிறார் செங்கோட்டையன். செங்கோட்டையனின் வரவு தமிழக வெற்றி கழகத்திற்கு பலம் கூட்டும் என்பதையும் மறுக்க முடியாது. அதே நேரத்தில் அதிமுகவில் அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைத்து எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்த செங்கோட்டையன் திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. கடந்த சில தினங்களாகவே இரண்டு முன்னாள் அமைச்சர்களுடன் செங்கோட்டையன் பேசி வருகிறார் எனவும் தகவல்கள் உலாவின.
அதிமுக அதிருப்தி
அதே நேரத்தில் அவர்கள் யார் என்பது குறித்து தகவல் கிடைக்கவில்லை. 'தங்கமான' முன்னாள் அமைச்சர் டெல்டாவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையலாம் என சொல்லப்பட்டது. இந்த நிலையில் தான் தமிழக அளவில் பிரபலமான குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் அரசியல் தலைவர்களில் ஒருவரான நாமக்கல்லை சேர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி எடப்பாடி பழனிச்சாமி மீது அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கின்றனர்.
தங்கமணி
செங்கோட்டையன் வெளியேறிய போது தங்கமணியும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நிலையில் தங்கமணி மீதான அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அதிமுகவினர் கூறினர். இதற்கிடையே அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், அதில் வாசிக்கப்பட இருக்கும் தீர்மானங்கள் தயாரிப்பு பணி கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது.
தவெக
அன்றைய தினம் தான் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். அந்த கூட்டத்தில் சிவி சண்முகம், கேபி முனுசாமி, ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் அந்த குழுவில் இடம் பெற்றிருக்கின்றனர். ஆனால் கொங்கு மண்டலத்தில் வலுவாக இருக்கும் தங்கமணி அந்த தீர்மானக் குழுவில் இடம் பெறவில்லை. அன்றைய தினமே இது தொடர்பான பேச்சுகளும் அதிமுக வட்டாரத்தில் பேசப்பட்டது. ஆனால் தீர்மானக் குழுவில் இடம்பெறாததால் தான் தங்கமணி அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என அதிமுகவினர் விளக்கம் அளித்தனர்.
கொங்கு மண்டலம்
அதிமுகவில் பல ஆண்டு காலமாக உழைத்து வரும் தன்னை தீர்மான குழுவில் சேர்க்கவில்லை என தங்கமணி மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால்தான் நேற்று கொங்கு மண்டலத்தில் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்ற கூட்டத்தில் கூட அவர் கலந்து கொள்ளவில்லை என்கின்றனர் அதிமுகவினர். ஏற்கனவே செங்கோட்டையன் அதிமுகவில் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களை தொடர்பு கொண்டு பேசி வரும் நிலையில், தற்போது தங்கமணி அதிருப்தியில் இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications