“13 பேரை குருவி சுடுவது போல சுட்டுக் கொன்றார்கள்.. எடப்பாடி போய் பார்த்தாரா?” - செங்கோட்டையன் ஆவேசம்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் குருவி சுடுவதைப் போல் 13 பேரை சுட்டுக் கொன்றபோது எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று பார்த்தாரா? 100 நாள் நடந்த அந்தப் போராட்டத்திற்கு எந்த அமைச்சராவது சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்களா? என தவெக நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார்.
கரூருக்கு தவெக தலைவர் விஜய் நேரில் செல்லாதது குறித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த விமர்சனத்திற்கு முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்துள்ளார்.

தவெக மாநில நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் இன்று கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "திமுகவுக்கும், தவெகவுக்கும் இடையேதான் போட்டி. எங்களைப் பொறுத்தவரை அதிமுக போட்டியில் இல்லை. பிரதமர் மோடி பங்கேற்ற என்.டி.ஏ. கூட்டத்தில், மேடையில் வைக்கப்பட்ட பேனரில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் இல்லை. எடப்பாடி பழனிசாமி முகத்திற்காக ஓட்டு வாங்கும் அளவிற்கு அவருக்கு செல்வாக்கு இருக்கிறதா?
நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சித் தேர்தல் வரை எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை. எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருப்பவர்கள் விஜய்க்குத்தான் வாக்கு எனும் சொல்லும் நிலை இன்று இருக்கிறது. எங்கள் சர்வே அடிப்படையில் நாங்கள் 40% வாக்குகளை பெறுகிறோம் என்பது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சம்பவத்தில் குருவி சுடுவதைப் போல் 13 பேரை சுட்டுக் கொன்ற போது அன்றைக்கு முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி நேரடியாகச் சென்று பார்த்தாரா? 100 நாள் நடந்த அந்தப் போராட்டத்திற்கு எந்த அமைச்சராவது சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்களா? விஜய்யை பற்றி பேச இவருக்கு தகுதி இல்லை.
கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தின் போது, காலையில் தான் தனக்கு சம்பவம் பற்றி தெரியும் எனச் சொன்னவர் அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி. இவர் எப்படி முதலமைச்சரானார் என்பதும், எப்படி தவழ்ந்து வந்தார் என்பதும் மக்களுக்கு தெரியும். 2026ல் விஜய் முதலமைச்சராவதை எந்தச் சக்தியாலும் தடுக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, "நாங்கள் எங்களது தலைவரின் வழிகாட்டுதலில் பயணிக்கிறோம். அதிமுகவில் இருப்பவர்கள் போல இஷ்டத்திற்குப் பேச முடியாது. கூட்டணி குறித்த முடிவைத் தலைவர் விஜய் தான் அறிவிப்பார்" எனத் தெரிவித்தார்.
மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும், ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தரும் தொழிலை விட்டுவிட்டு மக்கள் பணியாற்ற வந்திருக்கும் விஜய்யை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தவெக-வில் இணைந்த பிறகு, செங்கோட்டையன் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் கடுமையாகப் பேசி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications