இவர் யார் என தெரிகிறதா? அதிமுக- பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்து விட்டு ’மலைகளின் இளவரசி’யிடம் முகாம்!
சென்னை: பாஜகவுடனான கூட்டணியே இல்லை; நோட்டாவை கூட தாண்டாத கட்சி; எங்க கட்சி முடிவைத்தான் அறிவிக்கிறேன் என ஒரே போடாக டிக்ளேர் செய்த கையோடு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு ஓய்வெடுக்க சென்றுவிட்டார்.
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஜெயலலிதாவை தொடர்ந்து அண்ணாவை கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு அதிமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது. ஆனாலும் அண்ணாவை மட்டுமல்ல பெரியாரையும் பேசுவேன் என்றார் அண்ணாமலை.

சீறிய ஜெயக்குமார்: இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. பாஜக நோட்டாவை கூட தாண்ட முடியாது; வேஸ்ட் லக்கேஜ் என்றெல்லாம் வசைபாடினார். அதிமுகவினர் இந்த அறிவிப்பை கொண்டாடினர். பாஜகவினரும் சில இடங்களில் இனி தனித்துப் போட்டி என அறிவித்து இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இதனால் தமிழ்நாடு அரசியல் களம் பரபரத்தது.

அந்தர் பல்டி அண்ணா திமுக: ஆனால் திடீரென மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக- பாஜக கூட்டணி தொடருகிறது என பல்டி அடித்தார். அப்போதும் அண்ணாமலை, அண்ணா குறித்த பேச்சுக்கு மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது. எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க நாங்கள் ஆதரவு தர முடியாது என அதிமுகவினரை மீண்டும் சீண்டினார். இதனால் அதிமுக- பாஜக இடையேயான உறவு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது.

கொடைக்கானலில் ஜெயக்குமார்: இத்தனை களேபரங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் சரவெடியாக வெடிக்கப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஜெயக்குமாரோ, விண்ணுயர் மலைகள்!
விதவிதமான மரங்கள்! இவற்றின் முன் மேக கூட்டங்கள் கூட சிரம் தாழ்ந்து தான் போகின்றன! வழியெங்கும் விழி திரும்ப வைக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த இந்த 'கொடை'க்கானல்! இயற்கையே இங்கு பெரிது!!! என மலைகளின் இளவரசி தேசத்தில் முகாமிட்டு அட்டகாசமான போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இவர் யார்? என சட்டென அடையாளம் கண்டுபிடிக்காத வகையில் வழக்கமான உடைகளில் இல்லாமல் ஹாயாக கொடைக்கானலில் முகாமிட்டு இந்த படங்களைப் போட்டுள்ளார் ஜெயக்குமார். அதிமுக- பாஜக கூட்டணிக்கு வேட்டு வைத்துவிட்டு "பூட்டு" தேசமான திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வெடுக்கிறீர்களா? என நெட்டிசன்கள் கிண்டலடித்தும் வருகின்றனர்.
விண்ணுயர் மலைகள்!
— DJayakumar (@offiofDJ) September 19, 2023
விதவிதமான மரங்கள்!
இவற்றின் முன் மேக கூட்டங்கள் கூட சிரம் தாழ்ந்து தான் போகின்றன!
வழியெங்கும் விழி திரும்ப வைக்கிறது இயற்கை எழில் சூழ்ந்த இந்த 'கொடை'க்கானல்!
இயற்கையே இங்கு பெரிது!!!💚 pic.twitter.com/tFg7p8cPtl












Click it and Unblock the Notifications