பெரியார், அட்மின், மகாபாரதம்- எங்க திரும்பினாலும் ஹெச்.ராஜாவுக்கு கேட் போடும் ரிப்போர்ட்டர்ஸ்!
சென்னை: பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா நடத்தும் செய்தியாளர்கள் சந்திப்புகள் கடந்த சில நாட்களாக ரணகளங்களாக உருமாறிக் கொண்டிருக்கின்றன. செய்தியாளர்கள் கேள்விகளுக்கு இதுவரை வேறு ஒரு ஆங்கிளில் பதில் தந்த ஹெச்.ராஜாவுக்கு செய்தியாளர்களே பதில் தந்து மடக்குவதால் இந்த கலகலப்பு ஏற்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா ( எச்.ராஜா) செய்தியாளர்கள் சந்திப்புகளில் எப்போதும் ஆவேசமாக பேசுவார். தயவு தாட்சணயம் பார்க்காமல் சுடுசொற்கள் சரமாரியாக வந்துவிழும். இப்படியான பேச்சுகளால் நீதிமன்ற வழக்குகளை கூட அவர் சந்தித்திருக்கிறார்.
பாஜகவில் அடுத்தடுத்த பெரிய பொறுப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நேரத்தில் அவரது இத்தகைய பேச்சுகள்தான் முட்டுக்கட்டை எனவும் தகவல்கள் ரெக்கை கட்டிப் பறப்பது உண்டு. இப்போது எச்.ராஜாவின் செய்தியாளர் களம்- பிரஸ் மீட்டுகள் அப்படியே தலைகீழாகப் போய்விட்டன.

பொன்னியின் செல்வன் படம்
சென்னையில் பொன்னியில் செல்வன் படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்தார் ஹெச்.ராஜா. இந்த சந்திப்பின் போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சிலாகித்து மனம் மகிழ்ந்து பாராட்டினார். அத்துடன் வழக்கம் போல தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்தும் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தார். இப்படி ஹெச்.ராஜா பேசி முடித்ததும் அங்கே ட்விஸ்ட் காத்திருந்தது.

உங்க அட்மினா?
அண்மையில் எச்.ராஜா, நாய் ஒன்றை அடித்து கொலை செய்ததாக ட்விட்டர் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக பிராணிகள் நலவாரியம் விசாரணை நடத்துகிறது என செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக கேள்வி எழுப்பிய செய்தியாளர், சார். நாய் அடித்துக் கொலை என்கிற ட்வீட் நீங்க போட்டதா? அல்லது உங்க அட்மின் போட்டதா? என கிண்டலாக கேள்வி எழுப்பினார். ஏற்கனவே சில சர்ச்சைகளில் தமது அட்மின் ட்வீட் போட்டுவிட்டார் என பல்டி அடித்திருந்தார் ஹெச்.ராஜா. அதை நினைவூட்டி இந்த கேள்வி கேட்கப்பட்டது. அவ்வளவுதான்.. உச்சகட்டமான கோபத்துக்குப் போய், இப்படி நக்கலாக எங்கிட்ட பேசக் கூடாது.. ஹெட் அவுட் என சப்தம் போட்டார். நான் ஒரு மூத்த அரசியல்வாதி. .என்னை அசிங்கப்படுத்தி தவறாகப் பேசாதீஙக் என்றார்.

அவருதான் தந்தை பெரியார்
அத்துடன் முடிந்து போய்விடவில்லை. அதே பிரஸ் மீட்டில், ஆன்மீகம் இல்லாத மனிதர் யார்? என ஒரு கேள்வி கேட்டார் ஹெச்.ராஜா. இதற்கு யாருமே பதில் சொல்லமாட்டார்கள் என நினைத்துக் கொண்டிருந்தார் அவர். அப்போது செய்தியாளர் ஒருவர் சட்டென தந்தை பெரியார் என பதில் சொன்னார்.. இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத எச்.ராஜா ரொம்பவே ஆடிப் போய் அங்கிருந்து நகர்ந்துவிட்டார்.

அந்த மகாபாரதம்
சென்னையை தொடர்ந்து திருவண்ணாமலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் ஹெச்.ராஜா. அப்போது, கால்டுவெல் எழுதிய புனைவுகளை படிக்கிறீர்கள் என ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அந்த ஆவேசத்துக்கு நடுவே குறுக்கிட்ட செய்தியாளர் ஒருவர், புனைவுன்னு சொல்றீங்களே.. எப்படி மகாபாரதம் மாதிரியா? என சாஃப்ட்டாக கேட்டார்.. அப்புறம் என்ன அந்த இடமே அதகளமாகிப் போனது. வழக்கம் போல கெட் அவுட் என வார்த்தையை உதிர்த்துவிட்டு உக்கிரத்துடன் நடையை கட்டினார் ஹெச்.ராஜா.
எல்லா பக்கமும் கேட் போட்டா எப்படி?












Click it and Unblock the Notifications