தவெகவில் இணைந்தார் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சி மகேந்திரன்.. ‘சிவப்பு துண்டுடன் பயணிப்பேன்' என அறிவிப்பு!
சென்னை: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயலாளருமான சி. மகேந்திரன், தவெகவில் இணைந்துள்ளார். சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் என். ஆனந்தை சந்தித்து அவர் கட்சியில் இணைந்தார். தவெக பெரிய இயக்கமாக வளர்வதற்கான விதை விதைக்கப்பட்டுள்ளதாகவும், சிவப்பு துண்டுடன் தொடர்ந்து தவெகவில் பயணிக்க விரும்புவதாகவும் மகேந்திரன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சி. மகேந்திரன் தவெகவில் இணைந்தார். பனையூரில் உள்ள தவெக அலுவலகத்திற்கு சென்ற சி மகேந்திரன் என். ஆனந்த் முன்னிலையில் அக்கட்சியின் தன்னை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளராக சி மகேந்திரன் பதவி வகித்துள்ளார்.

சாதி, மத பாகுபாட்டை தவெக ஒழித்திருக்கிறது
2015 ஆம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்து போட்டியிட்ட சி. மகேந்திரன், அதில் டெபாசிட் இழந்துள்ளார். தவெகவில் இணைந்த பிறகு பேசிய சி. மகேந்திரன் பேசியதாவது:- இந்த தேர்தலில் தவெக சாதியை ஒழித்துக்காட்ட்டியுள்ளது. ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளார்.
ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளதால் தவெகவில் இணைந்துள்ளேன். சாதி தோற்கடிக்கப்பட்டதை அரசியலில் வியந்து பார்க்கிறேன். சாதி, மதம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை தவெகவின் தேர்தல் வெற்றி ஒழித்து இருக்கிறது. சிவப்பு துண்டோடு தவெகவில் செயல்பட விரும்புகிறேன். தவெகவின் வெற்றி, சாதியை ஒழித்துள்ளது..
ஊழலை ஒழிக்க முடியும்
தமிழ்நாட்டில் இருக்க கூடிய பல சிறைச்சாலைகளில் போராட்டங்களுக்காக இருந்துள்ளேன். 18 வயதில் இருந்து இன்று வரை கம்யூனிஸ்ட் கட்சிக்காக போராடிக்கொண்டு இருக்கிறேன். சிவப்பு துண்டை எடுக்காமல் செயல்பட வேண்டும் என நினைக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் சிந்தித்து நிறைவேற்ற முடியாத ஒரு பிரச்சினை என்னவென்றால் ஊழல் ஒழிப்புதான்.
அதை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கையை விஜய் தந்துள்ளார். அதனால்தான் தவெகவில் இணைந்தேன். சமூகம் என்பது ஆதிக்ககாரர்களுக்கான வசதியை மட்டுமே செய்து கொடுக்கிறது. என்னதான், அரசியல் பேசினாலும் சரி.. ஒடுக்கபப்ட்ட ஒருவருக்கு அரசாங்கத்தின் பணம், அரசாங்கத்தின் உணர்வுகள் இவையெல்லாம் சாதாரண ஒடுக்கப்பட்டவருக்கு கொண்டு போய் கொடுபப்தற்கான சாத்தியத்தை இந்த தேர்தல் விஜய் தலைமையில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. அது தமிழ்நாட்டின் வெற்றி மட்டுமல்ல.. இந்தியாவின் வெற்றியாகும் பார்க்கிறேன்..
ஏழை ஒருவனால் சட்டமன்றம் செல்ல முடியுமா?
நான் ரொம்ப வியந்து பார்த்த விஷயம் என்னவென்றால் இந்த தேர்தல் சாதியை ஒழித்து இருக்கிறது. மதத்தை ஒழித்து இருக்கிறது. ஏழை பணக்காரன் என்ற வேறுபாடுகளை போக்கி இந்திய ஜனநாயகத்தில் ஒரு சராசரி குடிமகனும் தேர்தலில் நின்று வெற்றி பெற்று வர முடியும் என்பதை தளபதி விஜய் உருவாக்கியிருக்கிறார். 2012 ஆம் ஆண்டு பாரிசில் நடைபெற்ற மாநாட்டில் உலக தலைவர்கள் எல்லாரும் கேட்டார்கள்.
ஏழை ஒருவனால் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு இன்றைய கால கட்டத்தில் செல்ல முடியுமா? என்று கேட்டார்கள். இந்த தேர்தல் பணம் இல்லாதவன், காசு இல்லாதவன் தேர்தலில் நின்று வெல்ல முடியும் என்பதை காட்டியிருக்கிறது. இதை ஜனநாயகத்தின் புரட்சியாக நான் பார்க்கிறேன்..
எளிய மக்களுக்கான பெரிய இயக்கம்
இது கட்சிகளை கடந்து, வேறுபாடுகள், மாறுபாடுகளை கடந்து, எளிய மக்களுக்கான பெரிய இயக்கமாக வளரவேண்டும். அதற்கான விதை போடப்பட்டு இருக்கிறது. எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற முறையில்தான் நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.















Click it and Unblock the Notifications