சென்னை தலைமை செயலகத்திற்கு வரையும் முக்கிய அரசு அதிகாரிகள்.. பறந்த உத்தரவு.. நாளை முக்கியமான நாள்
சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று 5 ஆண்டு கால ஆட்சி நிறைவு பெற போகிறது.. இன்னும் சில நாட்களில் தேர்தல் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வரப்போகிறது. அப்படி தேர்தல் அறிவிப்பு வந்தால், அரசால் எந்த அரசாணையும் போட முடியாது. ஏற்கனவே போடப்பட்ட அரசாணைகளை மட்டுமே செயல்படுத்த முடியும். தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் சென்றுவிடும்..எனவே விடுமுறை நாளான இன்று முக்கிய அரசுத் துறை அதிகாரிகளை பணியாற்ற மேலதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளதாகவும், நிலுவை அரசாணைகளை உடனே பிறப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 7.5.2021 அன்று பொறுப்பேற்றது. ஆட்சிக்கு வந்த பின்னர் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து, மகளிர் உரிமை தொகை, தமிழ் புதல்வன், நான் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்களை திமுக அரசு அமல்படுத்தியுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக நடந்து வந்த திமுக ஆட்சி இன்று (14-ந் தேதி) நிறைவடையும் என்று கூறப்படுகிறது.

ஏனெனில், நாளை அதாவது மார்ச் 15-ந் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், அனைத்து நிர்வாகப் பொறுப்பும் , அதிகாரங்களும் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்றுவிடும்.
அதன்பிறகு தற்போதிலுள்ள திமுக அரசு, காபந்து அரசாகிவிடும். முதல்வர், அமைச்சர்கள் யாரும் அரசு வாகனங்களை பயன்படுத்த முடியாது. அவர்கள் தங்களுக்கான வாகனங்களை தலைமைச் செயலகத்தில் விட்டுவிட்டுச் சென்றுவிட வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு வந்து அவர்கள் ஆலோசனை செய்ய முடியாது. முக்கிய திட்டங்களை அறிவிக்கவும் முடியாது.
ஏதாவது மிக முக்கிய பிரச்சனை என்றால் மட்டுமே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து முதல்வர் அல்லது அமைச்சர்கள் அழைத்து ஆலோசிக்க முடியும். ஆனாலும்தேர்தல் கமிஷனின் உத்தரவை பெற்றுத்தான் செயல்பட முடியும். அடுத்த ஆட்சி அமையும் வரை இந்த அரசு காபந்து அரசாக செயல்படும். புதிதாக நிதி தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியும். அதிகாரிகளை மாற்றுவது, அதிகாரிகளுக்கு பதவி உயர்வு, நிலுவை தொகை தொடர்பான பிரச்சனை எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. அரசு நிர்வாக ரீதியாக செயல்பட்டாலும், தேர்தல் ஆணையமே அனைத்து முடிவுகளையும் எடுக்கும்.
இந்நிலையல் நாளை தேர்தல் தேதி அறிவிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். அப்படி மார்ச் 15-ந் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது என்றால், இன்றுதான் (14-ந் தேதி) இந்த ஆட்சியின் நிறைவு நாளாக இருக்கும். எனவே முக்கிய துறைகளின் அதிகாரிகளை, இன்று விடுமுறை நாளென்றாலும் மேலதிகாரிகள் வேலைக்கு வரவழைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
நிலுவையில் உள்ள சில ஆணைகளுக்கான கோப்புகளை முடித்து வைக்கவும், கோப்புகளை நிலுவையில் வைக்காமல் இறுதி செய்யவும் அந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறதுது.. எனவே அது சார்ந்த அதிகாரிகளை மட்டும் முக்கிய துறைகளின் மேலதிகாரிகள் இன்று பணியாற்றும்படி அழைத்துள்ளனர் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் கூறுகிறார்கள். இன்று சென்னை தலைமை செயலகத்தில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் கூறுகிறார்கள். இதன்பிறகு மே மாதம் தேர்தல் முடிவுக்கு பின்னர் புதிய அரசின் வழிகாட்டுதல் படிதான் அதிகாரிகள் செயல்பட முடியும்.












Click it and Unblock the Notifications