ராமதாஸின் பகீரத பிரயத்தனம்! பாமகவை சேர்த்தால் திமுக கூட்டணிக்கு பேரழிவு? ஸ்டாலின் என்ன செய்வார்?
சென்னை: திமுக கூட்டணியில் பாமக செல்ல துடித்துக் கொண்டிருப்பதாகவும் முதல்வர் ஸ்டாலினின் முடிவு என்னவாக இருக்கும் என்பது குறித்தும் மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் என்பது திமுகவுக்கு மிகவும் முக்கியமானது என கருதப்படுகிறது. காரணம், அவர்கள் ஆட்சிக்கு வந்து அடுத்த தேர்தலிலும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டதில்லை. ஆனால் ஸ்டாலின் சொல்வது, 2036-ஆம் ஆண்டு வரை திமுகவே தொடர்ந்து ஆட்சி செய்யும் என்பதுதான்.

எனவே 2026 லும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள திமுக போராடி வருகிறது. இந்த நிலையில் பாமகவும் திமுக கூட்டணிக்குள் செல்ல பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதன் வெளிபாடுதான் சித்திரை திருவிழா மாநாட்டில் பாமக சார்பில் திருமாவளவனுக்கு பேனர் வைக்கப்பட்டது என்கிறார்கள்.
சித்திரை முழு நிலவு
சித்திரை முழு நிலவு மாநாட்டுக்கு திருமாவளவனை பாமக நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்து அழைத்ததெல்லாம் வழக்கமான ஒன்றுதான். ஆனால் திருமாவளவனுக்கு பேனர் அமைத்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இளவரசன் திவ்யா காதல்
2013 ஆம் ஆண்டு இளவரசன்- திவ்யா காதல் விவகாரத்தில் ராமதாஸ், தலித் அல்லாத கூட்டணியை உருவாக்கி, குறிப்பிட்ட சமூகத்தினர் ஜீன்ஸ் பேண்டு, கூலிங் கிளாஸ் போட்டுக் கொண்டு , மற்ற சமூகத்தினரின் வீட்டு பெண்களை காதல் வலையில் விழ வைக்கிறார்கள் என பகிரங்கமாக தெரிவித்திருந்தார்.
திருமாவளவன்
அப்படியிருக்கும் போது திருமாவளவனை படத்தை பேனரில் வைக்க அவசியம் என்ன என்பது குறித்து பத்திரிகையாளர் மணி, ஒன் இந்தியா அரசியல் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை பார்க்கலாம்.
பாஜகவுடன் கூட்டணி
அவர் கூறுகையில், கடந்த 2024 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என ராமதாஸ் விரும்பினார். ஆனால் அன்புமணிக்கோ பாஜகவுடன் செல்ல வேண்டும் என விரும்பினார். ஆனால் ராமதாஸ் இதற்கு மறுத்ததால் இரவு வரை அதிமுகவுடன் கூட்டணி பேசிவிட்டு, அதிகாலையில் பாஜகவுடன் கூட்டணியை இறுதி செய்ததை ராமதாஸ் விரும்பவில்லை.
முற்றுப்புள்ளி வைத்த ராமதாஸ்
அப்போதிலிருந்தே ராமதாஸ் - அன்புமணி இடையே விரிசல் எழுந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் மத்திய அமைச்சர் அமித்ஷா சென்னை வந்த போது பாமகவுடனும் கூட்டணி என அறிவிப்பதாக இருந்தது. ஆனால் இதை எப்படியோ உணர்ந்த ராமதாஸ், இந்த கட்சிக்கு நான்தான் தலைவர் என கூறி பாஜகவுடன் கூட்டணி செல்வதற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திமுக கூட்டணிக்கு செல்ல ராமதாஸ் விருப்பம்
தற்போது எப்படியாவது திமுக கூட்டணிக்கு சென்றுவிட வேண்டும் என ராமதாஸ் முயற்சிக்கிறார். ஆனால் இது அன்புமணிக்கு பிடிக்கவில்லை. இதனால்தான் இருவருக்கும் இடையே மோதல் வெடித்து வருகிறது.
பாமக பேச்சுவார்த்தை
திமுக கூட்டணியில் இடம் பெற பாமக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆனால் முதல்வர் ஸ்டாலின், பாமகவை கூட்டணிக்குள் சேர்ப்பாரா என்பது சந்தேகமே! பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் தான் இடம்பெற மாட்டேன், வெளியேறிவிடுவேன் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார்.
திருமாவளவனை இழப்பாரா
அதே வேளையில் திருமாவளவனை இழக்க ஸ்டாலினுக்கு விருப்பமில்லை. திமுக கூட்டணியில் திருமாவளவன் நம்பகத்தன்மை உள்ளவர் என்று ஸ்டாலினுக்கு தெரியும். ஒரு வேளை திமுக கூட்டணியில் இருந்து விசிக விலகினால், இடதுசாரிகளும் வெளியேறுவர். காங்கிரஸிலும் சில சலசலப்புகள் எழும்.
திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி
எல்லாவற்றுக்கும் மேலாக இத்தனை ஆண்டுகளில் திருமாவளவனுக்கு அமைச்சர் பதவி தருகிறோம், அதை தருகிறோம், இதை தருகிறோம் என ஆசை வார்த்தை காட்டியது. ஆனால் அதையெல்லாம் தனது கொள்கைக்காக திருமாவளவன் ஏற்க மறுத்தார்.
கொள்கையை விடாத தலைவர்
எத்தனை தலித் தலைவர்கள் தங்கள் கொள்கையை விட்டுக் கொடுத்துவிட்டு ஏதோ ஒரு வகையில் பாஜகவுடன் ஒத்து போய்விட்டார்கள். ஆனால் திருமாவளவன் அதில் ஸ்ட்ராங்காக இருக்கிறார். இது ஸ்டாலினுக்கு நன்றாகவே தெரியும். எனவே பாமகவுக்காக திருமாவளவனை இழக்க ஸ்டாலின் விரும்ப மாட்டார். 2013 ஆம் ஆண்டு இளவரசன் திவ்யா காதல் விவகாரத்தின் போது ராமதாஸ் பேசியதெல்லாம் ஸ்டாலினுக்கும் தெரியும். எனவே திமுக கூட்டணிக்கு பாமக வந்தால் அது மிகப் பெரிய பேரழிவாக அமையும் என மணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications