என் டாக்குமென்ட்டையே ED மாற்றிட்டாங்க? கோர்ட்டில் புதிய பாயிண்டை பிடித்த செந்தில் பாலாஜி
சென்னை: அசல் ஆவணங்களை அமலாக்கத் துறை மாற்றியதாக செந்தில் பாலாஜி தரப்பு கூறியதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் உத்தரவு பிறப்பிக்கபடும் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த மனு மீது மீண்டும் வாதிட அனுமதிக்க கோரி செந்தில் பாலாஜி சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அதில், இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி வங்கிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை என கூறப்பட்டிருந்தது.
அந்த ஆவணங்கள் கிடைத்த பின் அதனடிப்படையில் வாதிட அனுமதிக்க வேண்டும் எனவும் அவ்வாறு வாதிட அனுமதிக்கவில்லை என்றால் தனக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனை ஏற்று கடந்த 22ம் தேதி வங்கி தொடர்பான அசல் ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் நேரில் வழங்கப்பட்டன. இந்நிலையில், மனு மீதான வாதம் நீதிபதி எஸ்.அல்லி முன்பு நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் வழக்கறிஞர் மா.கெளதமன் ஆஜராகி, தங்களுக்கு அளிக்கப்பட்ட ஆவணத்திற்கும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களுக்கும் முரண்பாடுகள் உள்ளதாக கூறினார்.
காசோலை, செலான் உள்ளிட்ட வங்கி ஆவணங்களில் தேதி, மாதம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். ஆவணத்தின் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அதனை நிபுணர் குழுவின் ஆய்வுக்கோ அல்லது தடயவியல் சோதனைக்கோ உட்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
அமலாக்கத்துறை சார்பில் சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ஆவணங்களில் எந்த வேறுபாடும் இல்லை எனவும் ஆவணங்களை திருத்தவும் இல்லை என்றார். அசல் ஆவணங்களை வங்கி வழங்கியது தங்களுக்கு சாதகமானது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், அசல் ஆவணங்கள் மஞ்சள் நிறத்திலும், நகல் எடுக்கப்பட்ட ஆவணங்கள் கருப்பு, வெள்ளை நிறத்திலும் உள்ளன என்பதை தவிர அனைத்து குற்றச்சாட்டுகளையும் அமலாக்கத் துறை மீது செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளதாக கூறினார்.
இம்மனு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, மனு மீதான உத்தரவை ஏப்ரல் 30ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.












Click it and Unblock the Notifications