நீதிபதி நேரடியாக கேட்ட கேள்வி.. ஒப்புக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி.. ஹாஸ்பிட்டலில் என்ன நடந்தது?
சென்னை: செந்தில் பாலாஜியிடம் விசாரிக்கச் சென்ற நீதிபதியிடம், அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அமலாக்கத்துறை ரெய்டை தொடர்ந்து, நேற்று நள்ளிரவில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக அமலாக்கத்துறை கைது செய்ததாக புகார் எழுந்தது.

செந்தில் பாலாஜியின் மனைவி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத் துறை சார்பில் சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்ட வழக்குக்காக, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
செந்தில்பாலாஜி தற்போது மருத்துவமனையில் இருப்பதால், நீதிபதி தயைகூர்ந்து மருத்துவமனைக்கே வந்து அவரை ரிமாண்ட் செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் கோர்ட்டில் விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட அமர்வு நீதிபதி அல்லி, சுமார் 3.30 மணியளவில், ஓமந்தூரார் மருத்துவமனைக்கே நேரில் சென்று அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் விசாரித்தார்.
அப்போது செந்தில்பாலாஜி, நீதிபதி அல்லியிடம் இயல்பாக பேசினார். அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை துன்புறுத்தியதாக தெரிவித்தார். அப்போது அவரிடம், 'உங்களை எந்த வழக்கில் கைது செய்துள்ளனர் என்று தெரியுமா?' என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு, தெரியும் என்று செந்தில்பாலாஜி பதில் கூறினார். மேலும், தன்னிடம் அமலாக்கத்துறை சம்மன் கொடுத்ததாகவும் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அவரது புகாரை பதிவு செய்துகொண்ட நீதிபதி, அவரை ஜூன் 28 வரை நீதிமன்ற காவலுக்கு அனுப்புவதாக தெரிவித்தார். அதன்பிறகு, செந்தில்பாலாஜியின் வழக்கறிஞர் அதே இடத்தில் நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவதை எதிர்த்து ஒரு மனுவும், ஜாமீன் கோரி ஒரு மனுவும் தாக்கல் செய்தார்.
அதேசமயம், நீதிமன்றக் காவலை நிராகரிக்க கோரிய மனுவுக்கு அமலாக்கத் துறை தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருப்பது குறித்து திமுக வழக்கறிஞர்கள் நீதிபதியிடம் வலியுறுத்தினர்.
இதனையடுத்து செந்தில்பாலாஜி உடல்நிலை குறித்து விசாரிக்கவே தான் மருத்துவமனைக்கு வந்ததாக நீதிபதி அல்லி தெரிவித்தார். வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக்கொள்ளுங்கள் என இரு தரப்புக்கும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி அறிவுரை வழங்கினார்.
இதையடுத்து 5 மணியளவில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜிக்கு இடைக்கால ஜாமீன் கோரி வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது என்னென்ன காரணத்துக்காக இடைக்கால ஜாமீன் வேண்டும் என்பது குறித்து வாதிட்டனர்.
அமலாக்கத்துறை தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, அமலாக்கத்துறை, சட்ட விதிகளுக்கு உட்பட்டே செந்தில் பாலாஜியை கைது செய்ததாக வாதங்களை எடுத்து வைத்தனர். செந்தில்பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications