உச்சநீதிமன்றம் போட்ட கடிவாளம்.. சத்தமே இல்லாமல் வந்த செந்தில் பாலாஜி! பரபரப்பான சென்னை சிசிபி!
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி ஜாமினில் வெளிவந்துள்ளார். இந்த நிலையில் மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று உச்ச நீதிமன்ற நிபந்தனைப்படி சென்னை குற்றப்பிரிவு காவல் அலுவலகத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி.
அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் திமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டார்.

சுமார் 471 நாட்கள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் பலமுறை அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. 50க்கும் மேற்பட்ட முறை அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் தன் மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பாக செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுக்கள் மீதான உத்தரவு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. அவரது நீதிமன்ற காவல் நீட்டிப்பு, குற்றச்சாட்டு பதிவு போன்ற விவகாரங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தான் விசாரிக்கப்படுகிறது. இந்நிலையில் சட்டவிரோத பணப்பறிமாற்ற அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு ஜாமீன் வழங்க வேண்டுமென உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும், சாட்சியங்களை கலைக்க கூடாது, முதல் சனிக்கிழமை குற்றப்பிரிவு விசாரணை அதிகாரி முன் ஆஜராஜ வேண்டும், பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புழல் சிறையில் இருந்து வெளியே வந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.
செந்தில் பாலஜி விடுதலையை அடுத்து அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என கூறப்பட்டது. சொன்னது போலவே அமைச்சரவை மாற்றம் குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியானது. இதை அடுத்து ஆளுநர் மாளிகையில் நேற்று நடைபெற்ற பதவி ஏற்பு நிகழ்ச்சியில் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் ஏற்கனவே கவனித்து வந்த மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அமலாக்க துறையால் தனது பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றதற்கு பிறகு 30ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். இந்நிலையில் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை குற்றப்பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல் படி இன்று அவர் ஆஜரானார். கடந்த முறை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரானபோது அரசுத் துறை வாகனம் இல்லாது. தனது சொந்த வாகனத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார்.
தற்போது குற்றப்பிரிவு அலுவலகத்தில் தனது சொந்த வாகனத்திலும், காவல் வாகனங்கள் இல்லாமல் தனியாகவே செந்தில் பாலாஜி ஆஜர் ஆனார். கடந்த முறை ஏராளமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் குவிந்ததால் சலசலப்பு ஏற்பட்டது. இதை அடுத்து அது போன்ற விவகாரங்களை தவிர்க்கும் வகையிலேயே செந்தில் பாலாஜி இந்த முறை தனியாக ஆஜரானதாக கூறப்படுகிறது. மேலும் குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு யாரும் வர வேண்டாம் என செந்தில் பாலாஜி தரப்பு அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications