அமலாக்கத்துறை பிடியில் செந்தில் பாலாஜி.. நெஞ்சுவலிக்கு சிகிச்சை..மருத்துவமனைக்கு வந்த முதல்வர்
சென்னை: அமலாக்கத்துறையின் பிடியில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை காண முதல்வர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை புரிந்தார். செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்தும் அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கேட்டறிந்தார். அரசியல் பழிவாங்கும் இந்த நடவடிக்கையை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

நெஞ்சுவலி ஏற்படவே அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். செந்தில் பாலாஜிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன் , கே.என். நேரு , சேகர்பாபு உள்ளிட்டோர் அவரது உடல்நிலை மற்றும் சிகிச்சை குறித்து விசாரித்து செல்கின்றனர்.
மனிதநேயமற்ற முறையில் பா.ஜ.க.வின் அமலாக்கத்துறை நடந்துகொண்டது கண்டனத்துக்குரியது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுபோன்ற அடக்கு முறைகளை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறிய பிறகும் நெஞ்சு வலி வரும் அளவுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது அமலாக்கத்துறை என கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற இருந்த முதல்வரின் ஆய்வுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் காலை 10.30 மணிக்கு முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற இருந்த நிலையில் தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வரும் செந்தில் பாலாஜியை காண முதல்வர் ஸ்டாலின் வருகை தந்துள்ளார். அங்கு சிசிக்கை பெற்று வரும் செந்தில் பாலாஜி அறைக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் மருத்துவர்களிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்துள்ளார். எங்களுடைய அரசியல் நிலைப்பாட்டில் நாங்கள் தொடர்வோம் என்று கூறினார். பாஜகவின் மிரட்டலுக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications