மினி மீல்ஸ் கொடுத்த அமலாக்கத் துறை.. உண்ண மறுத்து தயிர் சாதம் கேட்ட செந்தில் பாலாஜி
சென்னை: அமலாக்கத் துறை அலுவலகத்தில் உள்ள செந்தில் பாலாஜிக்கு இன்று மதியம் மினி மீல்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை வாங்க மறுத்த அவர் தயிர் சாதமே போதும் என்றார்.
செந்தில் பாலாஜியை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து அவரை கைது செய்தது சட்டவிரோதம் என அவருடைய மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் இல்லை என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேகலா வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கில் கடந்த 2ஆம் தேதி இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. இதையடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி நேற்றைய தினம் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு தீர்ப்பளித்தது. அதில் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் அல்ல. அவரை அமலாக்கத் துறை விசாரணை நடத்துவது முக்கியமானது.
எனவே அவரை வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். இதையடுத்து செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அனுமதி கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியை வரும் 12 ஆம் தேதி வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை அமலாக்கத் துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியை கஸ்டடியில் எடுப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அதற்கான நடைமுறைகளை முடித்துக் கொண்டு தயாராக இருந்தனர். ஆனால் சிறைத் துறை நிர்வாகத்தின் விதிகளின் படி சிறையை விட்டு செல்லும் கைதுக்கு அந்த வேளைக்கான உணவை உண்ண வைத்துவிட்டுதான் அனுப்புவர்.
அந்த வகையில் செந்தில் பாலாஜிக்கு இரவு உணவாக 4 இட்லி வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 9 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு செந்தில் பாலாஜியிடம் இரவு எந்த விசாரணையையும் அதிகாரிகள் நடத்தவில்லை. அவரை தூங்குமாறு கூறிவிட்டனர்.
இதையடுத்து காலை 6 மணிக்கு அவரை எழுப்பினர். அவர் பேஸ்ட், சோப்பு, பிரஷ் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை வீட்டிலிருந்து எடுத்து வரச் சொல்லுமாறு கேட்டார். வீட்டிலிருந்து வருவதற்குள் அதிகாரிகளே அவருக்கு தேவையானதை வாங்கிக் கொடுத்தனர். இதையடுத்து அவருக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

மேலும் அவருக்கு இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை ரத்த கொதிப்பு சோதனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு நாளைக்கு அதிகபட்சம் 9 மணி நேரம் மட்டுமே அவரிடம் விசாரணை நடத்த மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அவரது அறையின் வெளிப்புறத்தில் மருத்துவர்கள் இருக்கிறார்கள். செந்தில் பாலாஜிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் உடனடியாக சிகிச்சை அளிக்க அவர்கள் உள்ளனர்.
மேலும் செந்தில் பாலாஜி மருந்து எடுத்துக் கொள்வதால் இரவில் விசாரிக்க கூடாது என்ற அறிவுரையும் உள்ளது. இந்தநிலையில் காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை 12 மணி வரை நடந்தது. பின்னர் உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது செந்தில் பாலாஜிக்கு மினி மீல்ஸ் கொடுக்கப்பட்டது. ஆனால் அது தனக்கு வேண்டாம் என்றும் தயிர் சாதம் வேண்டும் என கேட்டார். இதையடுத்து வேறு ஒரு ஹோட்டலில் தயிர் சாதம் வாங்கிக் கொடுத்தவுடன் அதை செந்தில் பாலாஜி சாப்பிட்டார்.












Click it and Unblock the Notifications