செந்தில் பாலாஜியின் எம்எல்ஏ பதவிக்கும் ஆபத்தா?.. அமலாக்கத்துறையின் கையில் உள்ள துருப்புச்சீட்டு
சென்னை: செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார் என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன. எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை என்றும் உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 8 மாதங்களாக புழல் சிறையில் இருக்கிறார். செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் தலைமறைவாக இருக்கிறார். இலாகா இல்லாத அமைச்சராக இருந்த காரணத்தினால் அவருக்கு ஜாமீன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி. மூன்று முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உச்சநீதிமன்ற கதவுகள் வரை தட்டி விட்டார். உயர்நீதிமன்றத்திலும் ஒருமுறை தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக நீடிப்பது எப்படி என்று கேள்வி எழுப்பினார். இதனையடுத்து தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி. அவரது ஜாமீன் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தருவதற்கு அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அமலாக்க துறை தரப்பில் வாதிட்ட கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், 2,700 பதவிகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒவ்வொரு நாளும் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்ற விவரங்கள் பென் டிரைவில் உள்ளன.
எந்த ஆதாரங்களும் ஜோடிக்கப்படவில்லை. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான அனைத்து ஆதார ஆவணங்களும் சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்ட உண்மை ஆவணங்கள் என விளக்கினார். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லாவிட்டாலும், எம்.எல்.ஏ.வாக நீடிக்கிறார்.
ஜாமீன் மனு விசாரணைக்கு வந்ததால் தான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதை அரசு உடனடியாக ஏற்றுக் கொண்டதில் இருந்து அவர் செல்வாக்கான நபர் என்பது தெளிவாகிறது. சாட்சிகள் அச்சுறுத்தப்பட மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் ஜாமீன் வழங்க கூடாது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.
அப்போது, அமலாக்க துறை வாதத்துக்கு பதிலளித்து செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்க துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை எனத் தெரிவித்த மூத்த வழக்கறிஞர், புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்க துறையினரே கூறுகின்றனர் என்று குறிப்பிட்டார்.
அமலாக்கத் துறை ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமானவை. செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும். நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க தயார் என குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். செந்தில் பாலாஜி எந்தப்பக்கம் போனாலும் அவருக்கு அமலாக்கத்துறை கேட் போட்டு வருகிறது. அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் அவரது எம்எல்ஏ பதவிக்கும் தற்போது செக் வைத்துள்ளது அமலாக்கத்துறை.












Click it and Unblock the Notifications