செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை எதிர்ப்பு.. தீர்ப்பை தள்ளி வைத்த ஹைகோர்ட் நீதிபதி
சென்னை: சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹைகோர்ட் நீதிபதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளி வைத்தார்
போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் வாங்கிய குற்றச்சாட்டில் சட்ட விரோத பணபரிமாற்றம் நடைபெற்றிருப்பதாக கூறி அமலாக்கத்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர்.

சுமார் 8 மாதங்களாக இவர் புழல் சிறையில் இருந்து வருகிறார். இவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் தலைமறைவாக இருந்தால் அவருக்கு ஜாமீன் கொடுக்கக் கூடாது என அமலாக்கத் துறை மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட போது அவர் அமைச்சராக இருப்பதால் அவர் வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்ற வாதமும் வைக்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 16ஆம் தேதி செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் முடிவடைந்தது.
அப்போது அவர் காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்றக் காவல் 20ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார். அதாவது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் 21 ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டது.
இதனிடையே செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை 21 ஆம் தேதிக்கு தள்ளி வைக்க செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 21ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர் காணொலி மூலம் சென்னை மாவட்ட 3ஆவது கூடுதல் அமர்வு நீதிபதி முன்பு புழல் சிறையில் இருந்தவாறே காணொலி மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை வரும் மார்ச் 4 ஆம் தேதி வரை 22 ஆவது முறையாக நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்றைய தினம் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது விசாரணை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தர அமலாக்கத்துறை சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாத விவாதங்கள் முடிவடைந்த நிலையில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications