19வது முறையாக.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நீதிமன்ற காவல்.. பிப். 15 வரை நீட்டிப்பு!
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பிப்ரவரி 15 வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கைது செய்யப்பட்டார் அமைச்சர் செந்தில் பாலாஜி. செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்திருந்தனர். 3000 பக்கங்களுடன் கூடிய இந்த குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டது.

அமைச்சர் செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கின் விசாரணை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, செந்தில்பாலஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைவதால் புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.
இதையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 19வது முறையாக செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறை விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கில் பிப்ரவரி 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications