பொன்முடி, செந்தில் பாலாஜி பதவி காலி! கழுத்துக்கு மேல் கத்தி..ஸ்டாலினுக்கு வழியில்ல! அண்ணாமலை அட்டாக்
சென்னை: தமிழக அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இந்த நிலையில் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி போக்குவரத்து பணியிடங்களுக்கு லஞ்சம் பெற்றதாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீண்ட நாட்களுக்கு பிறகு உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில் அவரது ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அமைச்சராக இருந்து கொண்டு சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது. உங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என கேட்டிருந்தது.

இதனால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிக்கல் ஏற்பட்டது. இதேபோல சைவம் வைணவம் குறித்தும் பெண்கள் குறித்தும் அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடி கட்சிப் பதவியில் இருந்து தூக்கி அடிக்கப்பட்டார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து மாற்ற வேண்டுமென அதிமுக பாஜக போர்க்கொடி தூக்கியதோடு, அதிமுக தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் வகித்து வந்த துறைகள் சிவசங்கர், முத்துசாமி, ராஜ கண்ணப்பன் ஆகியோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது தமிழகத்தில் அரங்கேறி இருக்கிறது என விமர்சித்துள்ளார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,"இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.
1. ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் திரு
முக ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.
2. ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.
திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன்." என கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications