செந்தில் பாலாஜி இலாகா மாற்றம்.. உடல்நிலை சரியில்லையா? காரணம் தவறு.. பரிந்துரையை ஏற்க மறுத்த ஆளுநர்?
சென்னை: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த இரண்டு துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை அளித்ததாகவும் இதை ஏற்க ஆளுநர் மறுத்ததாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 2015 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது, அந்த துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு செந்தில் பாலாஜி மீது நிலுவையில் இருந்தது. இதில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள உச்ச நீதிமன்றம் அனுமதியும் அளித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று முன் தினம், செந்தில் பாலாஜியில் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 17 மணி நேரம் விடிய விடிய சோதனை நடைபெற்ற நிலையில் செந்தில் பாலாஜி நள்ளிரவு கைது செய்யப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரத்த நாளங்களில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதை கண்டுபிடித்தனர். அவருக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய பரிந்துரை செய்துள்ளனர். இதற்கிடையில், செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்யப்பட்டார். அவரை வரும் 28 ஆம் தேதி நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பும், அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு மீதான தீர்ப்பும் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இருப்பதால், அவர் வகித்து வந்த இரண்டு துறைகளை மற்ற அமைச்சர்களுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அதன்படி, நிதியமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின்சாரத் துறையையும், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்து, அமைச்சரவையில் மாற்றம் செய்ய ஆளுநருக்கு முதல்வர் ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம் எனடும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில், இலாகா மாற்றம் தொடர்பாக தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுப்பு தெரிவித்தததாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் சரியில்லை எனக் கூறப்பட்ட காரணம் தவறான தகவல் எனக்கூறி இலாகா மாற்றத்தை ஏற்க ஆளுநர் மறுப்பு தெரிவித்ததாக பரவலாக செய்திகள் பரவி வருகின்றன.












Click it and Unblock the Notifications