செந்தில் பாலாஜி வழக்கு, அரசியல் பேச தடை, தமிழ்நாடு அரசுடன் மோதல்- ஆளுநர் ரவி இன்று டெல்லி பயணம்!
சென்னை: தமிழ்நாட்டில் பரபரப்பான அரசியல் சூழல் நிலவிவரும் நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றது முதல் தமிழ்நாடு அரசுடன் கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்தி வருகிறார். பாஜகவின் சித்தாந்தங்களை ஆளுநர் பொறுப்பில் இருந்தபோதும் பேசி வருகிறார். இது தமிழ்நாட்டில் மிகப் பெரும் சர்ச்சையாக தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ரவிக்கும் இடையே பகிரங்க மோதல் வெடித்தது. அமைச்சர் செந்தில் பாலாஜி பதவியில் இருக்கக் கூடாது என்பது ஆளுநர் நிலை. இதனால் அவரை டிஸ்மிஸ் செய்வதாக முதலில் அறிக்கை வெளியிட்டார் ஆளுநர். ஆனால் திடீரென சில மணிநேரங்களிலேயே இது தொடர்பான கடிதத்தை நிறுத்தி வைத்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
அமைச்சர்கள் நியமனம், நீக்கம் இவை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல்வருக்கான அதிகாரம். இதில் ஆளுநர் தலையிடக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தின் பல தீர்ப்புகள். ஆனால் ஆளுநர் ரவி திடீரென இந்த தீர்ப்புகளை மீறியதை மத்திய அரசு ரசிக்கவில்லை எனவும் கூறப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தலையிட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே ஆளுநர் என்பவர் அரசியல் பேசக் கூடாது என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மூலம் கடிவாளம் போடப்பட்டதாகவும் பேசப்படுகிறது. துணைவேந்தர்கள் விவகாரத்திலும் ஆளுநர் ரவி மீது தமிழ்நாடு அரசு கடுமையாக விமர்சனங்களை முன்வைத்து வருகிறது.
மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு தொடர அனுமதி தராமல் ஆளுநர் ஆர்.என்.ரவி கால தாமதம் செய்வதாக தமிழ்நாடுஅ அரசு குற்றம்சாட்டியிருக்கிறது. இதற்கு ஆளுநர் தரப்பில் விளக்கமும் தரப்பட்டிருக்கிறது.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளின் பின்னணியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அட்டர்னி ஜெனரல் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் ஆளுநர் ரவி. டெல்லியில் இருந்து ஜூலை 13-ந் தேதி ஆளுநர் ரவி தமிழ்நாடு திரும்ப உள்ளார்.












Click it and Unblock the Notifications