"அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது”.. அமலாக்கத்துறை பரபர வாதம்
டெல்லி: "அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது" என்று உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று வாதம் வைத்தது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு பல்வேறு நிபந்தனைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து அவர் அமைச்சராகப் பதவியேற்றார். ஜாமீன் பெற்ற உடனே செந்தில் பாலாஜி அமைச்சராகப் பதவியேற்றதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் என்பவர் வழக்கு தொடந்தார். அமலாக்கத்துறை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி உரிய பதிலை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது. இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 23 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அமைச்சர் பதவியா? ஜாமீனா? என்பதைச் செந்தில் பாலாஜி தரப்பு 28 ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் எனக் கூறி வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இந்த பரபரப்பான சூழலில் தான் அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எனவே அவர் வகித்த வந்த மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வுத்துறை, வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமிக்குக் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. அதே போல், செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத் துறையை, போக்குவரத்து அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் அகஸ்டின் ஜார்ஜ், அபய் எஸ் ஓகா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், "அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட செந்தில் பாலாஜி அமைச்சராக கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். விசாரணை முடியும் வரை மீண்டும் செந்தில் பாலாஜி அமைச்சராக பொறுப்பு ஏற்க கூடாது" என்று வாதிட்டனர்.
இதற்கு, "பதவியா, ஜாமீனா என்ற கேள்விக்கு செந்தில் பாலாஜி பதவி விலகி பதில் அளித்துவிட்டார்.
மீண்டும் அமைச்சராக முடியாது என உச்ச நீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை" என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது.
பின்னர் நீதிபதிகள், "மீண்டும் அவர் அமைச்சராக பொறுப்பு ஏற்றால், ஜாமீனை ரத்து செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்யலாம். செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம்; அந்த வகையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கத் தேவையில்லை." என தெரிவித்தனர். இதையடுத்து, பதவி விலகல் தொடர்பான ஆளுநர் மாளிகையின் செய்திக்குறிப்பை ஏற்று செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரும் மனுக்களை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications