செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சாராக தொடர்வார்..அரசு உறுதி..ஆளுநருக்கு முதல்வர் கடிதம்
சென்னை: செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்துள்ளதாக நேற்று இரவு தகவல் வெளியானது. இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரத்தைச் சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என தமிழக முதல்வர் அறிவித்தார். அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது அறிவிப்பை நிறுத்தி வைப்பதாக கூறினார் ஆளுநர் ரவி.

இதனையடுத்து தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. திமுக கூட்டணி கட்சித்தலைவர்கள் பலரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் தெரிவித்தனர். இன்று காலையில் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது. அதில், ஜூன் 16ஆம் தேதி செந்தில் பாலாஜி விவகாரம் தொடர்பாக நீங்கள் எழுதிய கடிதத்தில், விரும்பத்தகாத வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. நீங்கள் எழுதியுள்ள கடிதத்தில் செந்தில் பாலாஜி கைது குறித்த விவரங்கள் இடம்பெறவில்லை. இலாகாக்கள் மாற்றம் குறித்த தகவல் மட்டுமே இடம் பெற்றது. அந்த இலாகாக்கள் ஏன் மாற்றப்பட வேண்டும் என்ற முழுமையான தகவல்கள் இல்லை.
எனக்கு எழுதிய கடிதங்களில் விரும்பத்தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளீர்கள். தகவல்களை மறைக்கும் விதமாக உங்களது செயல்பாடுகள் உள்ளது '' என பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக முதல்வர் மீது ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் தான் செந்தில் பாலாஜியின் டிஸ்மிஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் கேட்கப்பட்டு செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைக் குறித்து தெரிவிக்கப்படும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று ஆளுநருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியை நீக்கும் உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநர் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பதில் எழுதியுள்ளார். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு ஆளுநருக்கு பதில் கடிதம் முதல்வர் ஆளுநருக்கு அனுப்பியுள்ளார்.
செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. அரசியல் அமைப்பு சட்டப்படி அமைச்சரை நீக்குவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் சாசனத்திற்கு எதிரானதாக உள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள பதில் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications