மூளைக்குச் செல்லும் குழாயில் ரத்தக் கட்டு.. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சையா?
சென்னை: செந்தில் பாலாஜிக்கு மூளையில் செல்லும் குழாயில் ரத்தக் கட்டு இருப்பதாகவும் பித்தப்பையில் கல் இருப்பதாகவும் வெளியான மருத்துவ அறிக்கைகளை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டவிரோத பணப்பரிசோதனை வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் அவர் திடீரென கடந்த 15 ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் மேல்சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 ஆம் தேதி புழல் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜி மதிய உணவை உட்கொண்டார். அவருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. ஏற்கெனவே அவருக்கு கால் மரத்து போகும் பிரச்சினையும் இருந்து வந்தது. இதையடுத்து சிறைத் துறை மருத்துவர்களின் அறிவுரைபடி அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அங்கு அவருக்கு இசிஜி பரிசோதனை எடுக்கப்பட்டு அதில் சீரற்ற நிலை இருந்ததால் மேல்சிகிச்சைக்காக அன்றைய தினமே ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். செந்தில் பாலாஜி உடல் மெலிந்து அவரால் நடக்க முடியாத அளவுக்கு இருக்கிறார். அவருக்கு கால் மரத்து போவதால் சிடி ஸ்கேன் எடுக்கப்பட்டது.
இதையடுத்து எம்ஆர்ஐ ஸ்கேனும் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு மூளையில் உள்ள குழாயில் ரத்த அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால்தான் கால் மரத்து போகிறது என மருத்துவர்கள் தெரிவித்தார். அதே வேளையில் முதுகுத்தண்டுவடத்தில் வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, இன்று 8ஆவது நாளாக இதயவியல், நெஞ்சகம், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களால், மீண்டும் பரிசோதனை மேற்கொள்ள பட உள்ளது. இது தவிர கழுத்து பகுதி சவ்வில் பாதிப்பு இருந்ததன் காரணமாக,
நரம்பியல் துறை மருத்துவர்களும் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அத்துடன் அவருக்கு பித்தப்பையில் இருக்கும் கொழுப்பு கட்டியை கரைப்பது குறித்து நிபுணர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவருடைய உடல்நல பிரச்சினைகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாமா அல்லது மருந்து மாத்திரை மூலமே குணப்படுத்திவிடலாமா என்பது குறித்து மருத்துவர்கள் ஆலோசனை நடத்தி வந்தனர். இந்த நிலையில் பித்தப்பையில் உள்ள கற்களை நீக்க அறுவை சிகிச்சை செய்யும் முடிவில் மருத்துவர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இன்று அவருடைய நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. அவர் மருத்துவமனையில் இருந்தபடியே ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications