புழல் சிறையிலிருந்து வெளியே வர தயாராகும் செந்தில் பாலாஜி.. நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட பாஸ்போர்ட்
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரவுள்ள நிலையில் அவருடைய பாஸ்போர்ட்டானது சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறையில் பெருங்கூட்டம் கூடியுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை குற்றம்சாட்டியது. இதில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கையும் அமலாக்கத் துறை பதிவு செய்து விசாரித்தது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியை பிஎம்எல்ஏ வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதையடுத்து புழல் சிறையிலிருந்து கொண்டே செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரியிருந்தார்.
அவருடைய மனுக்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்பட்டன. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் விசாரணை கைதியாகவே இருந்தாலும் அவரை நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருப்பது அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது என கூறி செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டது.
இந்த பாயிண்ட்டுடன் டிரிபிள் டெஸ்ட் மூலமும் ஜாமீன் வழங்கப்பட்டது. அதென்ன டிரிபிள் டெஸ்ட் என பார்ப்போம். பொதுவாக ஜாமீன் பெற இந்த டிரிபிள் டெஸ்ட்டில் பாஸ் ஆக வேண்டும்.
அதாவது
குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல மாட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர் எந்த ஆதாரத்தையும் சிதைக்க மாட்டார்.
குற்றம்சாட்டப்பட்டவர் தனது செல்வாக்கை பயன்படுத்தி சாட்சியங்களை கலைக்க மாட்டார்.
ஆகிய மூன்று பாயிண்டுகளுக்கான உறுதிமொழியை கொடுக்க வேண்டும். அந்த வகையிலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்திருந்த அம்சங்களில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கை நடத்த முடியாது என்பதும் செந்தில் பாலாஜி தரப்பின் வாதம். இதை வைத்தும் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம், நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டதை அடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன், தலா 25 லட்ச ரூபாய்க்கான பிணை உத்தரவாதங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடாததால் குழப்பம் உள்ளதாக தெரிவித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டார்.
பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என அமலாக்கத் துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது அடுத்து, செந்தில்பாலாஜியின் உறவினர்கள் சிவப்பிரகாசம் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த பிணை உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து செந்தில் பாலாஜியின் பாஸ்போர்ட் சென்னை முதன்மை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதன் மூலம் டிரிபிள் டெஸ்ட்டின் முதல் பாயிண்ட் பின்பற்றப்படுகிறது.












Click it and Unblock the Notifications