மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி உரிமை தொகையை வழங்க வேண்டியது மத்திய கடமை.. பழனிவேல் தியாகராஜன் அதிரடி
சென்னை: தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவாக பெறுவதுதான் தனது முக்கிய முதன்மையான நோக்கம் என்று, தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் மெத்த படித்து, பல நிதி நிறுவனங்களில் பணியாற்றிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பின்னர் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
2016ம் ஆண்டு மற்றும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் மதுரை மத்திய தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில்தான், ஸ்டாலின் அமைச்சரவையில், நிதியமைச்சராக்கப்பட்டுள்ளார், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.

ஜிஎஸ்டி நிலுவைத் தொகை
நேற்று அமைச்சரவை பதவியேற்ற நிலையில், ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தனது செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி கோடிட்டு காட்டியுள்ளார், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இதோ அவரது பேட்டியிலிருந்து, "எனது முதன்மை பிரச்சினைகளில் ஒன்று, தமிழகத்தின் ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெறுவதுதான். மோடி அரசின் நிதிக் கொள்கைகள் திருப்திகரமாக இல்லை. ஒரு மனிதன் தான் பேசுவதை போலவே நடந்து கொள்ள வேண்டும். அதே மாதிரி, ஒரு அரசும், அதன் கடமைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஜிஎஸ்டி உரிமைத் தொகையை வழங்க வேண்டியது மாநிலங்களுக்கு மத்திய அரசின் சட்டப்பூர்வ உறுதிப்பாடாகும். இதில் பேச்சுவார்த்தை நடத்த எதுவும் இல்லை.

அதிகாரப் பகிர்வு
மோடி அரசு மாநில சுயாட்சியை குறைத்து வருகிறது. தமிழகம் ஒரு வலுவான கட்டமைப்புகளை கொண்ட மாநிலமாகும். ஆனால், நீங்கள் டெல்லியில் உட்கார்ந்துகொண்டு, தமிழக மக்களுக்காக முடிவுகளை எடுக்க முடியாது. அதிகாரப் பகிர்வு என்பது ஆட்சிக்கு அடிப்படையாகும்.
மத்தியிலிருந்து மாநிலத்திற்கு மட்டுமல்ல, மாநிலத்திலிருந்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் இப்படி அதிகாரம் தரப்பட வேண்டும். உண்மையில், கேரளாவைப் பற்றி நாம் அதிகம் பாராட்டும் விஷயங்களில் ஒன்று, அவர்கள் நடைமுறைப்படுத்திய அதிகாரப் பரவலாகும்.

பன்முகத் தன்மை எங்கே
நம் நாட்டில் அதன் பன்முகத்தன்மை மற்றும் சிக்கலான தன்மை உள்ளது. எனவே, ஒரே கொள்கையை வைத்து நாட்டில் பிரச்சினைகளை தீர்க்க முடியாது. தமிழகத்தில் முடிதிருத்தும் கடைகளை மூடுவதையும், திறப்பதையும், டெல்லி ஏன் முடிவெடுக்கிறது. இங்கு ஒரு கட்டமைப்பு சிக்கல் உள்ளது, ஜிஎஸ்டியும் அதில் ஒரு அம்சம்தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இலவச திட்டங்கள்
அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில், மகப்பேறு விடுப்பை ஆறு மாதங்களிலிருந்து ஒரு வருடமாக உயர்த்துவதாகவும், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பாஸ் வழங்குவதாகவும், அரிசி ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ .4,000 ரொக்க உதவி வழங்குவதாகவும் திமுக உறுதியளித்தது. (இதில் கடைசி இரண்டு வாக்குறுதிகளை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார்).

இலவசம் மோசம் இல்லை
இதுபோன்ற இலவச திட்டங்கள், சரியா என்ற கேள்விக்கு, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்து கூறுகையில் "எல்லா இலவசங்களும் மோசமானவை என்ற அனுமானத்துடன் இருக்க வேண்டியதில்லை. பள்ளி மாணவர்களுக்கு நாம் இலவச உணவு கொடுக்க வேண்டாமா? மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுக்க வேண்டாமா? " என்று அவர் கேள்வி எழுப்பினார்.












Click it and Unblock the Notifications