7வது முறையாக ஸ்டாலின் அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. இதுவரை நடந்த மேஜர் சேஞ்ச் என்னென்ன? இதோ லிஸ்ட்!
சென்னை: தமிழக அமைச்சரவையில் ஏழாவது முறையாக இன்று மாற்றம் நடந்துள்ளது. அமைச்சர்கள் துரைமுருகன், ரகுபதி ஆகியோரின் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள ஏழாவது அமைச்சரவை மாற்றம் இது.
திமுக அரசு 2021 மே 7 ஆம் தேதி பதவி ஏற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 33 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அனுபவம் வாய்ந்த மூத்த அமைச்சர்கள், துடிப்பு மிக்க இளம் அமைச்சர்கள் என கலவையாக அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்று 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இன்று ஏழாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் நடந்துள்ளது.

முதல் மாற்றம்
அமைச்சரவையில் கடந்த 2022 மார்ச் மாதம் சிறிய மாற்றம் மட்டும் செய்யப்பட்டது. அதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த சிவசங்கர், போக்குவரத்து துறைக்கும், அந்த துறையின் அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டனர்.
இரண்டாவது மாற்றம்
திமுகவின் தேர்தல் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றியதற்காக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என்று திமுக மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 2022 டிசம்பர் 14 ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதனால் அமைச்சரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் சேர்ந்து அமைச்சர்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்தது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த மெய்யநாதனிடம் கூடுதல் துறையாக இருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை உதயநிதி ஸ்டாலினுக்கு ஒதுக்கப்பட்டது. கூடுதலாக சிறப்பு திட்ட அமலாக்கத்துறையும் அவருக்கு தரப்பட்டது. அவரோடு சேர்த்து, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறைக்கும், அந்த துறையின் அமைச்சராக இருந்த பெரியகருப்பனுக்கு கூட்டுறவுத்துறையும் ஒதுக்கப்பட்டது. இவ்வாறு 10 அமைச்சர்களின் இலாக்காக்கள் மாற்றி அமைக்கப்பட்டது.
மூன்றாவது மாற்றம்
மன்னார்குடி தொகுதி எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா, புதிதாக அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு தொழில் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதேபோல, பால்வளத்துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு. நாசர், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நான்காவது மாற்றம்
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதலாக திட்டம் மற்றும் வளர்ச்சித்துறையை ஒதுக்கியதோடு, துணை முதல்வராகவும் பொறுப்பு வழங்குமாறு தமிழக முதல்வர் ஆளுநரிடம் பரிந்துரைத்தார், அதனை ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
அமலாக்கத் துறை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்த செந்தில்பாலாஜி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சரவையில் டாக்டர் கோவி.செழியன், சா.மு.நாசர், பனைமரத்துப்பட்டி ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் புதிதாக சேர்க்கப்பட்டனர்.
பால்வளத்துறை அமைச்சரான டி.மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், சுற்றுலாத்துறை அமைச்சர் கே.ராமச்சந்திரன் ஆகியோரை அமைச்சர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பால்வளம், காதி, கிராமத் தொழில்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டார்.
5வது மாற்றம்
அமைச்சர்கள் பொன்முடி வனத்துறை அமைச்சராகவும், தங்கம் தென்னரசு நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சராகவும், ராஜகண்ணப்பன் பால்வளத்துறை அமைச்சராகவும், மெய்யநாதன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், டாக்டர் மதிவேந்தன் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், கயல்விழி செல்வராஜ் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சராகவும் மாற்றம் செய்யப்பட்டு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
6ஆவது முறையாக அமைச்சரவை மாற்றம்
செந்தில் பாலாஜி, பொன்முடி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் ஆனார்.
7வது முறையாக
இதனிடையே திமுக அரசு பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் இன்று மீண்டும் தமிழக அமைச்சரவையில் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சட்டத்துறை அமைச்சராக இருந்த ரகுபதியின் இலாகா மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகனுக்கு சட்டத்துறை நீர்வளத்துறையோடு கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
அதே போல அமைச்சர் துரைமுருகன் வசம் இருந்த கனிமங்கள், சுரங்கம் மற்றும் இயற்கை வளத்துறை, அமைச்சர் ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சீனியர் அமைச்சர்களின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசியல் விவாதமாக மாறியுள்ளது.












Click it and Unblock the Notifications