சிவசங்கர் பாபா மீது பாலியல் புகார்.. அலை அலையாக டி.சி. வாங்கும் மாணவிகள்.. ஆசிரியர்களும் ராஜினாமா!
சென்னை: பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவின், சுஷில் ஹரி பள்ளியில் இருந்து மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் மாற்று சான்றிதழை பெற்று செல்கின்றனர். அங்கு பணிபுரிந்த ஆசிரியர்களும் பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் பாலியல் புகார் தெரிவித்தனர்.

சிவசங்கர் பாபா செய்த கொடுமை
ஆன்மீகவாதி என்ற போர்வையில் சிவசங்கர் பாபா மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது வெளிச்சதுக்கு வந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த மாணவிகள், பயந்த சுபாவம் கொண்ட மாணவிகள் ஆகியோரை குறி வைத்து வந்துள்ளார் சிவசங்கர் பாபா. முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் குழந்தைகள் நல பாதுகாப்பு ஆணையர் சரஸ்வதி ரங்கசாமி தலைமையில் விசாரணை முன்னெடுக்கப்பட்டது

விரைவில் கைது?
இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தற்போது சிபிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ளது. தற்போது டேராடூனில் உள்ள சிவசங்கர் பாபாவை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர். அவர் விரைவில் கைது செய்யப்பட்டு தமிழ்நாட்டுக்கு அழைத்து வரப்படுவார் என்று தெரிகிறது.

ஆசிரியர்கள் ராஜினாமா
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கான வகுப்பு சான்றிதழை பள்ளியிலிருந்து அதிக அளவில் பெற்று கொண்டு சென்றனர்.
இதுதவிர சுஷில் ஹரி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றும் ஆசிரியர்களும் தங்களது பணியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

வெளியேறும் மாணவ-மாணவிகள்
இதுவரை சுமார் 50 சதவீதம் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர் மூலம் மாற்று சான்றிதழ் பெற்று பள்ளியில் இருந்து விலகியுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருந்து விலகி கொண்டனர். ''பிள்ளைகளின் பாதுகாப்பு தான் முக்கியம். பாலியல் புகாரில் சிக்கிய சிவசங்கர் பாபாவை கைது செய்து அதிகபட்ச தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும்'' என்பதே அனைத்து பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications