சங்கர் கொலை... கவுசல்யா தந்தை விடுதலை... தமிழக அரசு.. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
சென்னை: உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்து சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது.
கடந்த 2016ல் நடந்த சங்கர் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது உடுமலை சங்கர் கவுரவ கொலை. திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சேர்ந்த கவுசல்யா கல்லூரியில் தன்னுடன் படித்த மாணவர் சங்கரை காதலித்து வந்தார். சங்கர் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். தனது பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி சங்கரை 2015ஆம் ஆண்டு கவுசல்யா திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு தொடர்ந்து கவுசல்யாவின் பெற்றோர் மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் முன்பு 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் தேதி கவுசல்யா மற்றும் அவரது கணவர் சங்கர் இருவரையும் ஒரு கும்பல் சரமாரியாக வெட்டியது. இதில், சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், கவுசல்யாவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்த வழக்கு திருப்பூர் நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் முன்பு விசாரணைக்கு வந்தது. கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, ஜெகதீசன், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய 6 பேருக்கு மரண தண்டனை விதித்தார். கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி, அவருடைய தாய்மாமன் பாண்டித்துரை, பிரசன்னா ஆகிய மூவரை விடுவித்தார். ஸ்டீபன் தன்ராஜுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கவுசல்யாவின் பெற்றோர் மேல்முறையீடு செய்து இருந்தனர். இந்த வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. மேலும் 5 பேருக்கு விதித்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
பந்தல் கூட ஓகே.. அது ஏன் மைக் செட்.. சென்னை டாஸ்மாக்களில் ஏன் இந்த திடீர் ஏற்பாடு.. இதுதான் காரணம்!
Recommended Video
இந்த நிலையில் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. ஜெகதீஷ் உள்ளிட்ட 5 பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததற்கும் எதிர்ப்பு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.