நம்பியார் மகளா? அதை நம்பாதீங்க? பேரன் தீபக் நம்பியார் எமோஷனல் பேட்டி!
சென்னை: எம்.ஜி.ஆருக்கும் நம்பியாருக்கும் இடையே இருந்த 50 ஆண்டுகால நெருக்கமான நட்பு பற்றி அவரது பேரன் தீபக் நம்பியார் உணர்ச்சிகரமாகப் பேசி இருக்கிறார்.
தமிழ்சினிமா இருக்கும் வரை நம்பியாரையும் எம்.ஜி.ஆரையும் மறக்க முடியாது. அந்தளவுக்கு இந்த இருவரும் பல படங்களில் தங்களின் அசைக்க முடியாத நடிப்பு திறமையால் திரை ரசிகர்களைக் கட்டிப் போட்டு உள்ளனர். இந்த இருவரும் மறைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆனால், இன்றைக்குக் கூட வில்லன் என்றால் அது நம்பியாரைத்தான் குறிக்கும். மக்கள் பேச்சு வாக்கில் கூட 'நம்பியார் மாதிரி வில்லத்தனம் செய்யாதே' என்று குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு அவர் முத்திரை பதித்துள்ளார். அவரது பேரன் தீபக், தனது தாத்தாவைப் பற்றியும் அவரது நண்பரான எம்.ஜி.ஆரைப் பற்றியும் பல கதைகளைப் பேசி இருக்கிறார்.
இருவரும் எவ்வளவு உண்மையாக நட்புடன் இருந்தார்கள் என்பதை அவர் விளக்கிப் பேசி இருக்கிறார். அவர் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் நம்பியார் மகள் என்று ஒருவரைத் தவறாகக் காட்டி வருகிறார்கள். அவர் நம்பியாரின் மகள் இல்லை என்ற உண்மையையும் போட்டு உடைத்துள்ளார்.
தீபக் நம்பியார் ஒரு விளையாட்டு வீரர். இந்திய அளவில் விளையாடி சில பரிசுகளைப் பெற்றவர். அவர் தனது பேட்டியில், "நம்பியாரின் பேரன் என்பது உண்மைதான். ஆனால், அவரை ஒரு அப்பா ஸ்தானத்தில் வைத்துத்தான் நான் பார்த்து வளர்ந்திருக்கிறேன். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் அவர் வீட்டில்தான். அவருக்கு மூன்று குழந்தைகள். எங்க அம்மாதான் கடைசி. உண்மையில் சொல்லப்போனால் நான் அவருக்கு நான்காவது பிள்ளைதான். நான் அப்படித்தான் மனதில் நினைத்துக் கொண்டு வளர்ந்தேன்.
சின்ன வயதிலேயே அவர் எனக்கு சண்டைபோட கற்றுக் கொடுத்திருக்கிறார். அவருடன் ஃபைடிங் கற்றுக் கொள்ளும்போது என் மீது அடி எல்லாம் பட்டு உள்ளது. அப்போது என் பெற்றோர், 'பொறுமையா பார்த்து சண்டை கற்று கொடுங்க, சின்ன பையன். அவன் மீது அடி படுகிறது' என்று சொல்வார்கள். அதற்கு அவர், 'என்ன சின்னப் பையன்?அவனுக்கு 25 வயசாகிறது?' என்று நம்பியார் தாத்தா சத்தம் போடுவார்.
நாங்கள் சின்ன வயதில் இருந்தே குடும்பத்துடன் ஊட்டிக்கு மே மாதம் டூர் போவோம். அப்படி காரில் போகும்போது கோயமுத்தூர் பார்டர் கிராஸ் பண்ணும்போது மக்கள் அவரைப் பார்த்தால், 'டேய் நம்பியார்..' என்று சத்தம் போடுவார்கள். ஆக, சின்ன வயதிலேயே தாத்தா ஒரு ஃபிலிம் ஸ்டார் என்பது எனக்குத் தெரியும். அவரைப் பார்க்கப் பல விஐபிகள் வீட்டுக்கு வருவார்கள். அப்போதே தாத்தா ஒரு ஸ்டார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
தாத்தா ரொம்ப கண்டிப்பானவர். எனக்கு முதன்முதலாக வேலை கிடைத்த போது கடன் வாங்கி அவருக்கு ரோலக்ஸ் வாட்ச் வாங்கிக் கொடுத்தேன். அவர் அப்போது ரொம்ப எமோஷனலாக அதைப் பெற்றுக் கொண்டார். அவரும் சின்ன வயதில் கடன் வாங்கி வீட்டுக்குப் பணம் அனுப்பியதைப் பற்றிச் சொன்னார். அவர் கஷ்டப்பட்ட கதைகளைக் கேட்டிருக்கிறேன். அவர் அதற்கு, 'நான் நிறையக் கஷ்டங்கள் படவில்லை. என்னைவிட எம்.ஜி.ஆர் அதிகம் கஷ்டப்பட்டுள்ளார். எனக்கு ஒருவேளை சாப்பாட்டுக்கு உத்தரவாதம் இருந்தது. அதுகூட எம்.ஜி.ஆருக்கு கிடையாது.
ஊட்டியில் தாத்தா ஹோட்டலில் தங்கி இருக்கும்போது எம்.ஜி,ஆர் அங்கு இருந்தால், வந்து சந்திப்பார். இருவரும் சீட்டாட்டம் ஆடுவார்கள். நம்பியாருக்கு நாடகத்தில் நடிக்கும் போது சீட்டாட கற்றுக் கொடுத்ததே எம்.ஜி.ஆர்தான். அதை நான் அருகிலிருந்து பார்ப்பேன். கோபாலபுரம் வீட்டுக்கு வாரம் ஒருமுறை ரஜினி தாத்தாவைப் பார்க்க வருவார்.
எம்.ஜி.ஆரின் முதல் மனைவிக்கு டிபி நோய் இருந்தது. அவர் அதற்காகக் கோவைக்கு மருந்து வாங்க அடிக்கடி வருவார். அப்போது நாடகத்தில் நடித்து வந்த காலம். அப்போது நம்பியார் ஊரிலிருந்து வந்து போக அதிக செலவாகும். ஆகவே எங்கள் வீட்டிலேயே தங்கிக் கொள் என்று கேட்டுக் கொண்டார். அதற்காக எம்.ஜி.ஆர். 2 வருடம் எங்கள் வீட்டிலேயே தங்கி இருந்தார்.
நம்பியாருக்கு எம்.ஜி.ஆருக்கும் நெருங்கி நட்பு இருந்தது. தாத்தா எம்.ஜி,ஆர் மீதான நல்லது கெட்டதை நேரடியாக மறைக்காமல் சொல்வார். ஆகவே, இருவருக்குள் சில நேரங்களில் சண்டையும் வரும். 'உலகம் சுற்றும் வாலிபன்' படப்பிடிப்பு போது இருவருக்கும் பேச்சு வார்த்தை இல்லை. இறுதியாக எம்.ஜி,ஆர் வீட்டுக்கு வந்து நடிக்க வேண்டும் என்று சொன்னார்.
அதன்பின்னர் தாத்தா நடித்துக் கொடுத்தார். இருவரும் அண்ணன் தம்பி மாதிரி. 50 ஆண்டுகள் இருக்கும் நல்ல நட்பு இருந்தது. எனக்கு 3 வயது இருக்கும்போது தாத்தா என்னை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு கூப்பிட்டுப் போனார். அங்கே எம்.ஜி.ஆர் இருந்தார். நான் அவரைப் பார்த்துவிட்டு, 'ஹை சிவாஜி' என்று கத்தினேன். அதைக் கேட்ட எம்.ஜி.ஆர், தாத்தாவைப் பார்த்து, 'என்ன? என்னைவிடச் சிவாஜிகூட அதிகமா பழக்கமா? என்னை சிவாஜி என்கிறான்' என்று அன்பாக அதட்டினார்" என்கிறார்.
தொடர்ந்து பேசிய தீபக், "நம்பியாரின் மகள் என்றும் அவர் சரத்பாபுவை திருமணம் செய்து கொண்டவர் என்று வேறு யாருடைய படங்களையோ வெளியிட்டு தவறாக செய்தி பரப்பி வருகிறார்கள். அந்தப் புகைப்படத்தில் இருப்பவர் நம்பியாரின் மகள் இல்லை. நம்பியாரின் மகள் இதுவரை யாருக்கும் பேட்டியே கொடுத்தது இல்லை. அவர் அதை விரும்ப மாட்டார். மக்கள் நம்பியார் மீது அதிக அன்பு வைத்திருக்கிறார்கள். அதனால், அப்படியான செய்தியைப் போட்டதும் உண்மை இல்லை என்று தெரியாமல் பார்க்கிறார்கள். அதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார்.












Click it and Unblock the Notifications