தோல்வியால் விரக்தி.. அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அமமுக நிர்வாகிகள்! கலக்கத்தில் டிடிவி
சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்ட அமமுக நிர்வாகிகள் சுமார் 30 பேர் கூண்டோடு ராஜினாமா செய்து டிடிவி தினகரனுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போன கட்சி நிர்வாகிகள் இந்த முடிவை எடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் டிடிவி தினகரன் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணியில் இணைந்து டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டது. மொத்தம் 11 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் அமமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. மன்னார்குடி தொகுதியில் மட்டும் காமராஜ் வெற்றி பெற்றார். குதிரை பேர புகார், ஆளுநரிடம் நேராக சென்று கடிதம் என விஜய்க்கு எதிராக புகாரளித்து பரபரப்பை கிளப்பிய காமராஜ், சட்டமன்றத்தில் விஜய்க்கு ஆதரவாகவே திரும்பினார். இதனால், அவரை கட்சியில் இருந்து டிடிவி தினகரன் நீக்கிவிட்டார்.

அடுத்தடுத்து கூண்டோடு ராஜினாமா
இது ஒருபக்கம் இருக்க தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் டிடிவி தினகரனின் கட்சி நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் அமமுக செயலாளராக இருந்தவர் செந்தில் நாதன். இவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே விலகுவதாக நேற்று அறிவித்தார். அதிமுகவை எடப்பாடியிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கட்சி ஆரம்பித்துவிட்டு அவருடனயே போய் கூட்டணியில் சேருவதா என எதிர்ப்பு தெரிவித்த செந்தில்நாதன் கட்சியில் இருந்து விலகிவிட்டார்.
அதேபோல, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை நகர அமமுக செயலாளராக இருந்த லக்கி நாசரும், தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் யானை காலிதும் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்
அதேபோல, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏவுமான முருகனும் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நிர்வாகிக்ள் அடுத்தடுத்து டிடிவி தினகரனுக்கு பெரிய கும்பிடு போட்டு கிளம்பி வரும் நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அமமுகவில் 30 பேர் கூண்டோடு ராஜினாமா செய்தனர். ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி, கிளை கழகம் என கட்சியின் அடிமட்டம் வரை பொறுப்பில் இருந்தவர்கள் விலகுவதாக கூறினர்.
டிடிவி தினகரன் அதிர்ச்சி
இத்தனைக்கும் டிடிவி தினகரனின் சமுதாயம் சார்ந்த வாக்குகள் இந்த தொகுதிகளில் அதிகம் இருப்பதால் அவருக்கு வலுவான ஆதரவு இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவில் பெரிய அளவில் சோபிக்காததால் விரக்தி அடைந்த நிர்வாகிகள் கட்சியில் இருந்து விலக தொடங்கியுள்ளனர். நிர்வாகிகளின் அடுத்தடுத்த ராஜினாமா, டிடிவி தினகரனை அதிர்சி அடைய வைத்துள்ளது.
அதிமுகவில் உட்கட்சி பூசல் ஒருபக்கம் மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. எடப்பாடி பழனிசாமிக்கும், சிவி சண்முகத்திற்கும் மோதல் வெடித்துள்ள நிலையில் அமமுகவிலும் அடுத்தடுத்து நிர்வாகிகள் ராஜினாமா செய்து வருவது டிடிவி தினகரனுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதனால், கட்சி நிர்வாகிகளுக்கு தெம்பூட்டும் விதமாக விரைவில் டிடிவி தினகரன் அதிரடி நடவடிக்கைகளை எடுப்பார் என்று சொல்லப்படுகிறது. ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று எஸ்பி வேலுமணி முகாமில் இருந்து குரல் எழுந்துள்ள நிலையில் டிடிவி தினகரனின் அடுத்த கட்ட நகர்வு கவனம் பெற்று வருகிறது.














Click it and Unblock the Notifications