சைதாப்பேட்டையில் அதிர்ச்சி!.. மா. சுப்பிரமணியன் தோல்வி.. தவெக வேட்பாளர் வெற்றி
சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சென்னையின் முக்கிய தொகுதியாகக் கருதப்படும் சைதாப்பேட்டையில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது. திமுகவின் வலுவான கோட்டையாக கருதப்பட்ட இந்த தொகுதியில், கடும் போட்டிக்குப் பிறகு திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியன் தோல்வியடைந்துள்ளார். தவெக சார்பில் போட்டியிட்ட அருள் பிரகாசம் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தொகுதியில் மொத்தம் 15 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். திமுக சார்பில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் போட்டியிட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தமிழன், நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஸ்ரீவித்யா மற்றும் தவெக சார்பில் அருள் பிரகாசம் ஆகியோர் முக்கிய போட்டியாளர்களாக இருந்தனர்.

சைதாப்பேட்டை தொகுதியில் 98,535 ஆண் வாக்காளர்கள், 1,05,549 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தம் 2,04,146 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 74.84 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.
கடந்த 2021 தேர்தலில் மா. சுப்பிரமணியன் 29,408 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த முறையும் அவருக்கே சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறை நிலைமை மாறி, தவெக வேட்பாளர் அருள் பிரகாசம் 24,451 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று இறுதியில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், திமுகவின் பாரம்பரிய ஆதிக்கம் கொண்ட சைதாப்பேட்டை தொகுதியில் புதிய அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. தவெக கட்சியின் எழுச்சியை இந்த முடிவு தெளிவாக காட்டுகிறது.












Click it and Unblock the Notifications