கேடி அப்பா..கில்லாடி பாப்பா! மீஞ்சூர் சூட்கேஸ் கொலை வழக்கில் திடீர் திருப்பம்! வெளியான புதிய தகவல்
சென்னை: ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து சூட்கேஸில் பெண்ணின் சடலத்தை கொண்டு வந்த சம்பவத்தில் முதலில் போலீசார் விசாரணை நடத்திய போது, தனது மகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் கொலை செய்ததாக கொலையாளி கூறியிருந்தார். இந்த நிலையில் வழக்கில் திடீர் திருப்பமாக வேறு ஒரு தகவல் வந்திருக்கிறது.
சென்னை மீஞ்சூர் ரயில் நிலையம் திடீரென பரபரப்பாக மாறியது. ஆந்திர மாநிலம் நெல்லூரில் இருந்து தனது மகள் ஒருவருடன் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் இரண்டு சூட்கேசுகளுடன் புறநகர் ரயிலில் பயணம் செய்தார்.

மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தபோது அவசர அவசரமாக ரயிலில் இருந்து இறங்கிய தந்தையும் மகளும் தாங்கள் வைத்திருந்த சூட்கேஸை அங்கேயே வைத்துவிட்டு தப்ப முயன்றனர். அப்போது இருவரின் நடவடிக்கையை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
எதற்காக சூட்கேஸை வைத்து சென்றார்கள் அதில் போதை பொருட்கள் எதுவும் கடத்தப்பட்டதா என்ற ரீதியில் சூட்கேசில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது போலீசார் மட்டுமல்ல அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சூட்கேசில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் துண்டு துண்டாக வெட்டப்பட்டு அடைத்து வைக்கப்பட்டு இருந்தது, தொடர்ந்து அந்த நபரை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில் தனது 17 வயது மகளை பாலியல் தொழிலுக்கு அந்த மூதாட்டி அழைத்ததாகவும் இதனால் ஆத்திரத்தில் அவரை அடித்து கொலை செய்ததாகவும் கூறியுள்ளார். உள்ளூரில் சடலத்தை வைத்தால் போலீசார் கண்டுபிடித்து விடுவார்கள் என்பதற்காக சூட்கேசில் சடலத்தை வைத்து மீஞ்சூர் ரயில் நிலையம் வந்து வைத்து விட்டு செல்லலாம் என நினைத்ததாக கூறினார். இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் கொலையாளி ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பதும் அவரது மகள் அதே பகுதியில் கல்லூரியில் படித்து வந்ததும் தெரியவந்தது. அந்தப் பெண்ணை பாலியல் தொழிலுக்கு அழைத்ததால் ஆத்திரத்தில் அவரை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைத்தோம் எனக் கூறியிருந்தார்.
தொடர்ந்து கொலை ஆன பெண் நெல்லுரை சேர்ந்த 65 வயதான ரமணி என்பது தெரியவந்தது. தொடர்ந்து இருவரிடமும் விசாரணை நடத்தியதும், திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. முதலில் பாலியல் தொழிலில் மகளை ஈடுபடுத்த முயன்றதால் கொலை செய்ததாக பாலசுப்பிரமணியன் கூறியிருந்த நிலையில் நகைக்காக மூதாட்டியை அடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. இதை அடுத்து இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications