நம்ம சென்னைக்கு என்னதான் ஆச்சு? இளைஞரை கொடூரமாக வெட்டிய கும்பல்.. சாலையில் கெத்தாக ஊர்வலம் வேற..ஷாக்
சென்னை: சென்னை போரூர் அருகே இரு இளைஞர்களை அரிவாளால் கொடூரமாக தாக்கி விட்டு சாலையில் அரிவாள்களுடன் இரு சக்கர வாகனத்தில் ஊர்வலம் செல்வது போல கெத்தாக சென்ற இளைஞர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் கடந்த சில நாட்களாகவே குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இரு ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல், ரூட்டு தல பிரச்சனையில் கொலை என பல்வேறு சட்ட விரோத சம்பவங்கள் அதிகரித்து வருவது சென்னைவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சென்னை போரூர் அருகே ஐயப்பன்தாங்கல் பகுதியில் இளைஞர் ஒருவரை வெட்டிய ரவுடி கும்பல் சாலையில் நின்றிருந்த பைக், கார்கள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை போரூர் அருகே ஐயப்பன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் தமிழ். இவர் மீது அப்பகுதியில் உள்ள காவல் நிலையங்களில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கும் காட்டுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சபரி என்ற ரவுடிக்கும் முன் பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து இருவரும் பல்வேறு தருணங்களில் கும்பலாக மோதல் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று சபரி ஐயப்பன் தாங்கல் அருகே தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த சபரி தனது கூட்டாளிகளுடன் ஐந்து இரு சக்கர வாகனங்களில் அங்கு சென்று தனியே நின்றிருந்த தமிழ் மீது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் தமிழ் சரிந்த நிலையில் சபரி தலைமையிலான கும்பல் அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பியுள்ளனர்.
மேலும் செல்லும் வழி எல்லாம் நின்றிருந்த கார்கள், பைக்குகள் மீது தாக்குதல் நடத்தி அவற்றை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் அவர்கள் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. படுகாயம் அடைந்த தமிழ் போரூர் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ரவுடிசம் அதிகரித்துள்ள நிலையில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications