தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்கள் தொகுதி.. குறைவான வாக்காளர்கள் தொகுதி எது தெரியுமா?
சென்னை: தமிழ்நாட்டில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூர் தொகுதியும், குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூர் தொகுதியும் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறியுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவிற்கு தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. நாடு முழுவதும் அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் அதற்கான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். தமிழ்நாட்டில் 6.11 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழ்நாட்டில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் 3.10 கோடி பெண் வாக்காளர்கள் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டசபைத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ள தொகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. சோழிங்கநல்லூர் தொகுதியில் மொத்தம் 6 லட்சத்து 52ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். நாகை மாவட்டத்தின் கீழ்வேளூர் தொகுதி உள்ளது. இத்தொகுதியின் மொத்த வாக்காளர்களாக 1 லட்சத்து 69 ஆயிரம் பேர் உள்ளனர்.
வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனவும், இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளதாகவும், இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் எனவும் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளிடம் நேரடியாகவும், தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வாயிலாகவும் வாக்காளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். வரும் நவம்பர் 4, 5, 18, 19-ம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
இதில் பங்கேற்றும் விண்ணப்பங்களை அளிக்கலாம். பரிசீலனைக்கு பிறகு பெயர் சேர்ப்பு, திருத்தம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். இப்பணி டிசம்பர் 9ஆம் தேதி வரை நடைபெறும். இதன் அடிப்படையில், இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்து லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தயாராகுங்கள்.












Click it and Unblock the Notifications