பாலத்தில் இருந்து குதித்த சிவகார்த்திகேயன்.. மக்கள் கூட்டத்தால் ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை
சென்னை: அமரனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனின் புதிய படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை, வண்டலூர், ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் நடைபெற்ற படப்பிடிப்பு காரணமாக பொதுமக்கள் அப்பகுதியில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அமரனைத் தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களில் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ன்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தீபாவளி அன்று வெளியான இந்தப் படம் தற்போதும் வணிக ரீதியாக வசூலை குவித்து வருகிறது. அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோ பிக்காக எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். இந்தப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அமரன் பாராட்டி வருகின்றனர்.
முதல் இரண்டு வாரங்களில் மட்டுமே அந்தப் படம் இந்தியா முழுவதும் சுமார் ரூ.250 கோடி வசூலை கடந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையையும் அமரன் பெற்றுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து பல புதிய மைல் கல்லை எட்டும் அமரன், பல பெரிய நடிகர்களின் படங்களுக்கு இணையாக சாதனை படைத்து வருகிறது.
நாடு முழுவதுமே அமரனுக்கு நல்ல வரவேற்புள்ளது. இதனால், ஓடிடி ரிலீஸை கூட தள்ளி வைக்க வேண்டும் என்று திரையரங்க உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முதல் இரண்டு வாரங்களில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்புல்லாக சென்றுள்ளது. சூர்யா நடிப்பில் கங்குவா படம் வெளியான நிலையிலும் அமரனுக்கு கூட்டம் குவிந்து வருகிறது.
இந்நிலையில், சிவகாத்திகேயனின் அடுத்த படத்தின் ஷூட்டிங் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருகிறது. சென்னை, வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று நடந்த நிலையில் பொதுமக்கள் அங்கு குவியத் தொடங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது, நடிகர் சிவகார்த்திகேயன் பெருங்களத்தூர், வண்டலூர் ஜிஎஸ்டி சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து கீழே குதிப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. சிவகார்த்திகேயனைக் காண அப்பகுதியில் ரசிகர்கள், பொதுமக்கள் பலரும் கூடினர். சிவகார்த்திகேயன் பாலத்தில் நிற்பது போன்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமரன் படத்தை தொடர்ந்து, சிவகார்த்திகேயன் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடித்து வருகிறார். பிரபரல கன்னட நடிகை ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்து வருகிறார். படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படம் தவிர சிபி சக்கரவர்த்தி, வெங்கட் பிரபு, சுதா கொங்கரா படம் என அடுத்தடுத்த மெகா ஹிட் கூட்டணியுடனும் படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் படத்துக்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. அமரன் படத்தில் ஜிவி பிரகாஷின் இசை படத்தை கூடுதலாக ஒருபடி மேலே கொண்டு சென்றது. ஒவ்வொரு பாடலும் மனதை வருடும் வகையில் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், புறநானூறு படத்துக்கு ஜிவியே இசையமைக்கிறார். இந்தப் படம் ஜிவியின் நூறாவது படமாகும்.












Click it and Unblock the Notifications