ஸ்ருதி ஹாசனையே டென்ஷனாக்கிய இன்டிகோ விமானம்.. 4 மணி நேரம் நொந்து நூடுல்ஸான சம்பவம்
சென்னை: இன்டிகோ விமானம் தாமதம் குறித்து முறையாக அறிவிக்காததால் 4 மணி நேரம் தான் நொந்து நூடுல்ஸானது குறித்து நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமாகிய ஸ்ருதி ஹாசன் தனது எக்ஸ் தள பக்கத்தில் குமுறியுள்ளார். இந்தப் பதிவுக்கு இன்டிகோ விமான நிர்வாகமும் பதில் அளித்துள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகராகவும், அரசியல்வாதியாகவும் இருப்பவர் கமல்ஹாசன். இவரது மகள் ஸ்ருதி ஹாசன். நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது ஸ்ருதி ஹாசன் மும்பையில் வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்ருதி ஹாசன் சமூக வலைதளங்களில் எப்போதுமே மிகவும் ஆக்டிவ்வாக இருப்பார்.

குறிப்பாக, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். மற்ற நடிகர்களைப் போலவே இவரும் Ask Me Anything என்ற பெயரில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதத்தில் கூட இந்த ஆஸ்க் மீ எனிதிங்கில் நெட்டிசன் ஒருவர் தென்மாநில மொழியில் ஏதாவது ஒன்றை கூறுங்கள் என்று கேட்டிருந்தார். அந்த கேள்வியால் கடும் கோபமடைந்த ஸ்ருதி 'மூடிட்டு போடா' என்று பதிலளித்திருந்தது குறிப்பிடத்தக்கது
பொதுவாக விமானப் போக்குவரத்தில் மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு போன்றவற்றால் சேவை பாதிக்கப்படும் போது முன்கூட்டியே பயணிகளுக்கு விமான நிர்வாகம் தாமதம் குறித்து தகவல் அளிக்கும். சில நேரம் அறிவிப்புகளை வெளியிடாததால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறும்.
அந்த வகையில், மும்பையில் இருந்து புறப்படும் இன்டிகோ விமானம் 4 மணிநேரம் தாமதமானதாகவும், ஆனால், அது தொடர்பான எந்தவொரு முறையான அறிவிப்பையும் இன்டிகோ விமான நிறுவனம் அளிக்கவில்லை என்றும் நடிகை ஸ்ருதிஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்ருதி ஹாசன் நள்ளிரவு 12.24 மணிக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், நான் சாதாரணமாக குறை சொல்லும் நபர் இல்லை. ஆனால், இன்டிகோ நிறுவனத்தினர் இன்று பெரும் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டனர். கடந்த 4 மணி நேரமாக எந்த விதமான ஒரு தகவலும் கிடைக்காமல் நாங்கள் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம். உங்கள் பயணிகளுக்கு உதவ முன்வருவீர்களா? என்று குறிப்பிட்டிருந்தார்.
ஸ்ருதி ஹாசனின் இந்தப் பதிவுக்கு இன்டிகோ நிறுவனம் அளித்துள்ள பதிலில், "விமானம் தாமதத்தால் உங்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். குறித்த நேரத்துக்கு மேல் காத்திருப்பது எத்தனை சிரமமானது என்பதை நாங்கள் முழுதாக புரிந்து கொள்கிறோம். மும்பையில் மோசமான வானிலை நிலவி வருவதால் விமானங்கள் வருவது தாமதமாகி உள்ளது.
இதுபோன்ற காரணங்கள் எல்லாம் எங்களுடைய கட்டுப்பாட்டை மீறியது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், எங்கள் விமான நிலைய குழுவினர் விமான தாமதத்தால் காத்திருக்கும் பயணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வார்கள் என்று நாங்கள் உறுதி அளிக்கிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications