‛நுங்கு’ மார்பக சர்ச்சை.. சிக்கிய டாக்டர் ஷர்மிகா.. சித்தா கவுன்சிலில் நேரில் ஆஜர்.. பறந்த உத்தரவு!
சென்னை: குளோப் ஜாமூன் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும். பெண்கள் குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் என மருத்துவ குறிப்புகள் வழங்கி சித்த மருத்துவர் ஷர்மிகா சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் மீது புகார்கள் குவிந்த நிலையில் சித்த மருத்துவ கவுன்சில் முன்பு நேரில் இன்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். இந்த வேளையில் அவரிடம் ஏராளமான கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில் அவர் மீதான புகார்கள் குறித்து பிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்றைய விசாரணையில் நடந்தது என்ன என்பது பற்றி சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் விரிவாக விளக்கினார்.
தமிழ்நாடு பாஜகவின் சிறுபான்மை அணி பிரிவின் தலைவியாக இருப்பவர் டெய்சி சரண். இவர் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவரது மகள் பெயர் ஷர்மிகா. இவர் சித்த மருத்துவராக உள்ளார். இவர் சமீபத்தில் பல்வேறு யூடியூப் சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார்.
பெண்கள் உடல் நலனை பாதுகாத்து கொள்வது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு மருத்துவ குறிப்புகளை ஷர்மிகா வழங்கினார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வேகமாக பரவ தொடங்கின.
நுங்கு சாப்பிட்டால் பெண்களுக்கு..எங்கம்மா பாஜக என்பதால் விமர்சனம் வருது! குலாப் ஜாமூன் புகழ் ஷர்மிகா
நுங்கு சாப்பிட்டால்..
இந்நிலையில் தான் ஷர்மிகா கூறிய சில கருத்துகள் சர்ச்சையை கிளப்பின. அதாவது, ஒரு குலோப் ஜாமுன் சாப்பிட்டால் 3 கிலோ வரை எடை அதிகரிக்கும். நெய் சாப்பிட்டால் முகம் பொலிவாகும். நம்மை விட பெரிய மிருகத்தை சாப்பிட்டால் நமக்கு ஜீரணம் ஆகாது. இதனால் மாட்டு கறி சாப்பிடக்கூடாது. பெண்கள் குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் என்பன போன்ற ஷர்மிகாவின் கருத்துகள் சர்ச்சையை கிளப்பின.
பறந்து சென்ற நோட்டீஸ்
இந்நிலையில் தான் அவர் மருத்துவத்துக்கு அப்பாற்பட்டு ஷர்மிகா உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக ஷர்மிகா மீது புகார்கள் தெரிவிக்கப்பட்டன. சித்தா மருத்துவ இயக்குனரகத்துக்கு புகார்கள் சென்றன. ஷர்மிகா பதிவுபெற்ற மருத்துவர் என்பதால் அவரது விளக்கத்தின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
விசாரணைக்கு ஆஜரான ஷர்மிகா
மேலும், நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என ஷர்மிகாவுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதன்படி இன்று சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரி இயக்குனராக அலுவலகத்தில் சித்தா மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும், குப்புறப்படுத்தால் மார்பக புற்றுநோய் வரும் என்பன போன்ற குறிப்புகளை எந்த அடிப்படையில் வழங்கினார் என்பது பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. இதற்கு ஷர்மிகா விளக்கம் அளித்தார். இதையடுத்து புகார்கள் தொடர்பாக பிப்ரவரி 10ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து ஷர்மிகா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
சித்த மருத்துவ இயக்குனர்
இந்த விசாரணை குறித்து சித்த மருத்துவ இயக்குனர் கணேசன் விளக்கம் அளித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: சித்த மருத்துவ கவுன்சில் அழைப்பானையை ஷர்மிகாவுக்கு வழங்கப்பட்டது. அதனை ஏற்று அவர் விசாரணைக்கு ஆஜரானார். அவர் மீது நிறைய பேர் புகார் அளித்துனர். புகார்களின் நகல்கள் அவரிடம் வழங்கப்பட்டுள்ளது. அதனை படித்து பார்த்துவிட்டு எழுத்துப்பூர்வமாக பிப்ரவரி மாதம் 10ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விளக்கம் வந்த பிறகு நிபுணர் குழு பரிந்துரையில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
இன்று நடந்தது என்ன?
இன்று ஷர்மிகா தன்மீதான புகார்களுக்கு வாய்மொழியாக விளக்கம் அளித்தார். தற்போது எழுத்துப்பூர்வமாக அவர் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது தான் விசாரணை துவங்கி உள்ளது. சித்தா கவுன்சிலில் சில நடைமுறைகள் உள்ளன. அவரது விளக்கத்தை பொருத்து அதனடிப்படையில் ஷர்மிகா மீது நடவடிக்கை என்பது மேற்கொள்ளப்படும்'' என்றார்.