சென்னை அரசு பஸ்களில் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள்.. விபத்துக்களை தடுக்க எம்டிசியின் சூப்பர் ஐடியா!
சென்னை: பேருந்துகள் செல்லும் போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சக்கரத்துக்கு அடியில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 1,315 பஸ்களில் இத்தகைய கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.
சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர், அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் என தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி வருகிறார்கள். மாநகர பேருந்துகளில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மநகர பேருந்து கழக நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

பேருந்துகளின் தானியங்கி கதவு பொருத்தும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றன. படிக்கட்டுகளின் தொங்கியபடி உயிருக்கு ஆபத்தான முறையில் பயணிப்பதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை எடுத்தது. சென்னையை பொறுத்தவரை கல்லூரி மாணவர்கள் பலரும் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகிறார்கள்.
தற்போது தானியங்கி கதவுகள் பொருத்தப்படுவதன் மூலம் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பதால் பயணிகள் மத்தியில் இந்த முயற்சிக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், தான் தற்போது சென்னை மாநகர பேருந்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குவதை தடுக்கும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை போக்குவரத்து கழகம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, பேருந்து செல்லும் போது பக்கவாட்டில் சில இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி பேருந்து சக்கரத்தில் கீழே விழுந்து சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் விதமாக பேருந்துகளுக்கு இரு புறமும் கீழ் பக்கவாட்டில் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணிகளை மாநகர போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது 1,315 பஸ்களில் இத்தகைய கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளதாம்.

இது தொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பாதசாரிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக பேருந்தில் பக்கவாட்டில் கம்பிகள் அமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. விபத்துக்களின் போது பஸ்சின் கீழ் பக்கமாக பைக்கில் செல்பவர்களோ அல்லது பாதசாரிகளோ சிக்கி கொள்வதை தடுக்கும் விதமாக இது உள்ளது.
குறிப்பாக எதிர்பாராத நேரங்களிலோ யாரும் பேருந்துக்கு அடியில் விபத்தில் சிக்குவதை தடுக்கும் வகையில் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 2,212 பேருந்துகளை தேர்வு செய்து உள்ளோம். முதல்கட்டமாக 600 பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. இரண்டாவது கட்டமாக 1,612 பேருந்துகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. கம்பிகளை பொருத்தும் பணி தொடர்ந்து முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது












Click it and Unblock the Notifications