எல்லாரும் கைவிட்டுட்டாங்க.. யாருமே இல்லையாம்? தலைவருக்கே இந்த நிலைமையா.. ஒன்று கூடிய சீனியர்கள்
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் சீனியர் தலைவர் எல்லோரும் ஒன்று கூடி உள்ளனர். பொதுவாக கோஷ்டி மோதல் காரணமாக தனி தனியாக இயங்கும் நிர்வாகிகள் முதல்முறையாக விஷயம் ஒன்றிற்காக ஒன்றாக கரம் கோர்த்து உள்ளனர்.
காங்கிரஸ் கட்சிக்கான தேசிய தலைவராக சமீபத்தில் மல்லிகார்ஜுன கார்கே பொறுப்பேற்றார். இவர் பதவி ஏற்ற நிலையில் தற்போது பல்வேறு மாநிலங்களிலும் காங்கிரஸ் தலைவர்களை மாற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் தலைவர்களை மாற்றி மாநில வாரியாக புதிய நிர்வாகிகளை நியமனம் செய்ய வேண்டும். இளம் தலைவர்களை தலைவர் பதவிக்கு போட வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழ்நாட்டில் இந்த விவகாரம் உச்சம் பெற்றுள்ளது.
அதிரடி காட்டிய டெல்லி.. சரித்திர முடிவு.. “உயிர் உள்ளவரை காங்கிரஸ்” உணர்ச்சிபொங்க பேசிய ரூபி மனோகரன்
காங்கிரஸ்
பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் காங்கிரசில் புதிய தமிழ்நாடு தலைவர் நியமிக்கப்படவில்லை. இவர் டெல்லி தலைமையுடன் மிகவும் நெருக்கமாக இருந்து வந்தார். அதோடு டெல்லியின் குட் புக்கிலும் இருந்தார். லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல் இரண்டிலும் இவரின் தலைமைக்கு கீழ் தமிழ்நாட்டில் காங்கிரஸ் - திமுக கூட்டணியில் இணைந்து நன்றாக செய்யப்பட்டது. இதனால் டெல்லியின் கரிசனம் அப்போது இவருக்கு இருந்தது. தொடக்கத்தில் கார்த்தி சிதம்பரம் தரப்பின் ஆதரவும் இருந்தது.
இல்லை
ஆனால் கடந்த சில நாட்களாக இவருக்கு எதிராக தொடர்ந்து டெல்லிக்கு புகார் சென்றுள்ளது. கட்சியில் நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடக்கிறது. நிர்வாகிகள் நியமனம் மற்றும் கட்சி விஷயங்களில் முடிவு எடுப்பதில் கே. எஸ் அழகிரி தனித்து செயல்படுகிறார். மூத்த தலைவர்களிடம் ஆலோசனை செய்வது இல்லை என்று தொடர்ந்து புகார்கள் சென்ற வண்ணம் உள்ளன. தொடக்கத்தில் இந்த புகார்களை எளிதாக சமாளித்து இருக்கிறார் கே. எஸ் அழகிரி. டெல்லியில் தனக்கு இருந்த நல்ல பெயர் காரணமாக இவர் விவகாரங்களை எளிதாக திசை திருப்பி இருக்கிறார். ஆனால் சமீபத்தில் காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த மோதல் காரணமாக நிலைமை கைமீறி சென்றுள்ளதாம்.
என்ன நடந்தது?
காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் பதவிக்கான ஆயுட்காலம் முடிந்து 1 வருடத்திற்கும் மேல் ஆகிவிட்ட நிலையிலும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. கே.எஸ் அழகிரி தலைவர் பதவியில் நீடிப்பதற்கான திட்டங்களை போட்டு வருகிறார். இதை பற்றி கேள்வி கேட்க போய்தான் சண்டை வந்ததாக கூறப்படுகிறது. கே.எஸ் அழகிரியை மறித்து ரூபி மனோகரன் ஆட்கள் சில கேள்விகளை கேட்க முயன்ற நிலையில் இந்த மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் சிலருக்கு தலையில் ரத்தமும் ஏற்பட்டது. இந்த விவாகரத்திற்கு பின்புதான் அழகிரி மீது டெல்லி காங்கிரஸ் தலைமை சுத்தமாக நம்பிக்கை இழந்து உள்ளதாம்.
நீக்கம்
காங்கிரஸ் தலைமையக மோதல் தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற விசாரணையில் ரூபி மனோகரன் ஆஜராகவில்லை என்று கூறி அவர் நீக்கம் செய்யப்பட்டார். கே. எஸ் அழகிரி உத்தரவின் பெயரில் தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு இந்த சஸ்பெண்டை செய்தது. இந்த நீக்கத்தை டெல்லி காங்கிரஸ் தலைமை ரத்து செய்தது. கே.எஸ் அழகிரிக்கு எதிரான நடவடிக்கையாக இது பார்க்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் சீனியர் லீடர்கள் எல்லோரும் தற்போது கே. எஸ் அழகிரிக்கு எதிராக கரம் கோர்த்து உள்ளனர். செல்வப்பெருந்தகை, தங்கபாலு, இளங்கோவன் மற்றும் அவரின் ஆட்கள் என்று பெரும் படையே டெல்லிக்கு சென்று சமீபத்தில் கே.எஸ் அழகிரிக்கு எதிராக புகார் வைத்தனர்.
ஜோதிமணி
அதேபோல் ஜோதிமணியும் தலைவரை மாற்றுவது தொடர்பாக ஆலோசனைகளை செய்து வருகிறார். நான்தான் தலைவராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரமும் வெளிப்படையாக சொல்ல ஆரம்பித்துவிட்டார். ரூபி மனோகரனும் தலைவர் பதவிக்கு அடிபோட்டுக்கொண்டு இருக்கிறார். மொத்தமாக கட்சியில் இருக்கும் சீனியர்கள் எல்லோரும் இப்போது கே.எஸ் அழகிரி என்ற ஒற்றை புள்ளிக்கு எதிராக திரும்பி உள்ளனர். கே. எஸ் அழகிரிக்கு என்று ஆதரவாளர்கள் இப்போது யாரும் பெரிதாக இல்லை. சீனியர்கள் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்வது இல்லை. பெரும்பாலும் சிறிய நிர்வாகிகள் சிலரே அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதனால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெகு விரைவில் மாற்றப்படலாம் என்று பேச்சுக்கள் தீவிரம் அடைந்து உள்ளன. கடந்த சில மாதங்களாகவே இந்த பேச்சு தமிழ்நாடு அரசியலில் உலவி வருகிறது.