புயலால் அபாய நிலை.. நாகையில் ஏற்றப்பட்டது 10வது எண் புயல் கூண்டு!
Recommended Video
சென்னை: நாகப்பட்டினத்தில் 10வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது பரபரப்பு நிலவுகிறது. ஏனெனில் இது மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கான முன்னறிவிப்பாகும்.
துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்றுவதற்கு பின்னணியில் பல்வேறு காரணங்கள் உண்டு. அதிகபட்சமாக 11 எண் வரையில், கூண்டுகளை ஏற்ற முடியும்.
இதில் கஜா புயல் கரையை கடப்பதையொட்டி நாகப்பட்டினத்தில் பத்தாவது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடலூரில் ஒன்பதாவது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஒன்பதாவது எண் புயல் கூண்டு பொருள் என்னவென்றால், துறைமுகத்துக்கு வலது பக்கமாய் புயல் கடந்து மோசமான வானிலை நிலவும் என்பதாகும்.
அதேநேரம் பத்தாவது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், துறைமுகம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களுக்கு அபாய நிலை என்பது எச்சரிக்கையாகும். 2016 ஆம் ஆண்டு சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை பந்தாடிய வர்தா, புயலின்போது பத்தாவது எண் எச்சரிக்கை கூண்டுதான் ஏற்றப்பட்டிருந்தது.
இப்போது நாகப்பட்டினம் துறைமுகத்தில் அதே போன்ற புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளதால், புயலால், அந்தப் பகுதியில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை உணர முடிகிறது.
11வது எண் புயல் கூண்டு ஏற்றப்பட்டால், அந்த புயல் பேரழிவை ஏற்படுத்த கூடியது என்பது அர்த்தம்.