+2 போல இனி கல்லூரிகளிலும்.. ஒரே சமயத்தில் தேர்வு, ஒரே நாளில் முடிவு.. அமைச்சர் பொன்முடி சொன்ன தகவல்!
சென்னை : "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும். ஒரே நேரத்தில் தேர்வு, ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் உயர் கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும்." என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் மாநில கல்விக்கொள்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 19 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

துணை வேந்தர்களுடனான ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி கூறுகையில், "ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒவ்வொரு சமயத்தில் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் தனித்தனியாக அறிவிக்கப்படுகின்றன. இது மாணவர்கள் கல்லூரி மாறும்போது பிரச்சனை ஏற்படுகிறது. ஒரு பல்கலைக்கழகத்தில் தேர்வு முடிவுகள் வருவதற்கு முன்பே வேறு இடங்களில் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.
இதை தவிர்ப்பதற்காக வருகிற காலங்களில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் பட்டப்படிப்பு தேர்வு முடிவுகளை ஒரே நாளில் அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வுகள் நடத்தப்படுவது போல, அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே நேரத்தில் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடப்படும்.
ஒரே நேரத்தில் தேர்வு, ஒரே நாளில் முடிவு, ஒரே நாளில் முதுநிலை உயர்கல்வி சேர்க்கை ஆகிய அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டில் அமலுக்கு வரும். மொழிப்பாடங்களுக்கு அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் பின்பற்றப்படும். பல்கலைக்கழகங்களில் தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் 25 சதவீதம் மாற்றம் செய்யலாம்.
முதுகலை மாணவர் சேர்க்கையும் ஒரே நேரத்தில் நடத்தப்படும். மாணவர்கள் படிக்கும் போது வேலைவாய்ப்பு அளிப்பது தான் நான் முதல்வன் திட்டம். தேசிய கல்வி கொள்கையின் சிறப்பம்சங்களையும் மாநில கொள்கையில் கொண்டு வருவோம்.

பொறியியல் கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிட்டால் அங்கு சேர்ந்துவிடுவார்கள். அப்படி செல்லும் மாணவர்கள், நாங்கள் தனியார் கல்லூரியில் பணம் கட்டிவிட்டால் அதை திரும்ப தர மறுக்கிறார்கள், மாற்றுச் சான்றிதழ் தர மறுக்கிறார்கள் என புகார்களை முன்வைக்கின்றனர்.
எந்த தனியார் அல்லது அரசு கல்லூரியாக இருந்தாலும், மாணவர்கள் சேர்ந்தபிறகு, அவர்கள் வேறு கல்லூரிகளில் சேர விரும்பினால், அவர்கள் முதலில் சேர்ந்த கல்லூரிகளில் கட்டிய பணத்தையும், மாற்றுச் சான்றிதழையும் திரும்ப தர வேண்டும் என துணைவேந்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications