இது சில்லரை பிரச்சனை.. ஐயப்பன் பாடல் சர்ச்சையில் இசைவாணியை கைது செய்யக்கூடாது.. ஆதரவாக வந்த திருமா
சென்னை: "பாடகி இசைவாணி இந்து மதத்தை காயப்படுத்தும் நோக்கில் பாடல் பாடவில்லை. பெண்ணின் குரலாக, பெரியாரின் குரலாக அவர் பாடலை பாடியுள்ளார். அதானி பிரச்சனைகளை திசைதிருப்ப இந்த சில்லரை பிரச்சனைகளை கையில் எடுக்கிறார்கள். அது ஏற்புடையது இல்லை. இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமானது அல்ல. அது கண்டனத்துக்குரியது" என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
திரைப்பட இயக்குநர் பா ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருபகுதியாக ‛கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' என்ற இசைக்குழு உள்ளது. இந்த இசைக்குழுவில் கானா பாடகியும், பிக்பாஸ் போட்டியாளருமான இசைவாணி உள்ளார். சமீபத்தில் மார்கழியில் மக்களிசை என்ற பெயரில் இசை நிகழ்ச்சி நடந்தது.

இதில் இசைவாணி மேடையில் சபரிமலை ஐயப்பன் சாமி பற்றி பாடிய பாடல் விவாதமாகி உள்ளது. தற்போது கார்த்திகை மாதம் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் விரதம் கடைப்பிடித்து சென்று வரும் சூழலில் இந்த பாடல் இணையதளங்களில் பரவி சர்ச்சையாகி உள்ளது.
அதாவது ‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி" என்ற பாடலை இசைவாணி பாடியிருந்தார். சபரிமலை ஐயப்பன் சுவாமி கோவிலுக்கு பெண்கள் செல்ல தடை உள்ளது. இதனை கேள்வி கேட்கும் வகையில் அவர் இந்த பாடலை பாடியிருந்தார். அடிப்படையில் இசைவாணி கிறிஸ்தவர் என்பதாலும், ஐயப்பன் சாமி பற்றி அவதூறாக பாடல் பாடி இந்து மதத்தையும், பக்தர்களின் நம்பிக்கையையும் கலங்கடித்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக இசைவாணி, இயக்குநர் பா ரஞ்சித் மீது போலீஸ் நிலையங்களில் புகார்கள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் போலீசார் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று போராட்டத்தையும் தொடங்கி உள்ளனர்.
தற்போது இந்த விவகாரம் தமிழ்நாட்டில் பேசும் பொருளாகி உள்ளது. இசைவாணிக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வரும் அதேவேளையில் திமுக உள்ளிட்ட கட்சியில் உள்ளவர்கள் வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவரிடம், ‛‛பாடகி இசைவாணி இந்து மதத்தை அவமரியாதை செய்யும் விதமாக பாடல் பாடியுள்ளதாக கூறி இந்து அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனரே.. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?'' என்று பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு திருமாவளவன், ‛‛மதத்தை அல்லது மத உணர்வை காயப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அது பாடப்பட்ட பாடல் அல்ல. ஐயப்பன் திருக்கோவிலில் பெண்கள் நுழையக்கூடாது என்ற சர்ச்சை எழுந்தபோது ஒரு பெண்ணிய குரலாக, பெரியாரின் குரலாக இசையாக வெளிவந்துள்ளதே தவிர யாருடைய உணர்வுகளையும் காயப்படுத்துவதாக அது இல்லை. அதானி போன்ற பிரச்சனைகளை தமிழ்நாட்டில் திசைதிருப்ப வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே இதை பெரிதுப்படுத்துகிறார்கள்.
அதானி கைது செய்யப்பட வேண்டும் என்பது இப்போது தேசிய அளவில் பெரிய கோரிக்கையாக மாறி இருக்கிறது. அதை திசைதிருப்புவதற்கு இந்த சில்லரை பிரச்சனைகளை கையில் எடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். அது ஏற்புடையது அல்ல. இசைவாணியை கைது செய்ய வேண்டும் என்று சொல்வது பொருத்தமானது அல்ல. அது கண்டனத்துக்குரியது'' என சாடியுள்ளார்.












Click it and Unblock the Notifications