ஒற்றைத்தலைமை பிரச்சினை..அதிமுக அலுவலகம் விரைந்த ஓபிஎஸ்..வராத எடப்பாடி - தீர்வு எப்போது?
அதிமுகவில் ஒற்றைத்தலைமை பிரச்சினை சூடுபிடித்துள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிச்சாமி இடையே மோதல் முற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை: ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வமும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமியும் நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தை விட்டு கிளம்பி விட்டார் ஓ.பன்னீர் செல்வம். அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒற்றைத்தலைமை பிரச்சினைக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என்று தொண்டர்கள் எதிர்பார்க்கத் தொடங்கியுள்ளனர்.
அதிமுகவிற்கு ஒற்றைத்தலைமை தேவை என தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் ஆலோசனைக்கூட்டத்தில் வலியுறுத்தியதை அடுத்து கட்சி ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ்., இருவரும் தங்கள் ஆதரவாளர்களுடன் தனித்தனியே ஆலோசனை நடத்தினர். கடந்த 5 நாட்களாகவே இந்த விவகாரம் பெறும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மைத்ரேயன் இருவரும் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

மைத்ரேயன் ஆலோசனை
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மைத்ரேயன், "தற்போது அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர். இணை ஒருங்கிணைப்பாளர் அமைப்பு நல்ல முறையில் சென்று கொண்டிருக்கிறது. ஒற்றைத்தலைமை வேண்டுமா..! வேண்டாமா..! என்பது குறித்து அதிமுக பொதுக்குழு கூடிய பிறகு முக்கிய நிர்வாகிகள் கலந்து பேசி முடிவெடுக்கலாம் என்று ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

ஒற்றைத்தலைமை
ஒற்றைத்தலைமையாக யார் வேண்டும் என்று முதலில் ஆரம்பித்த ஜெயக்குமாரை தான் கேட்க வேண்டும். அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து ஒரு மணி நேரம் கலந்து பேசி விவாதித்தால் பல பிரச்சனைகளுக்கு முடிவு வந்துவிடும் என்றார்.

ஓபிஎஸ் வருகை
இந்த நிலையில் இன்றைய தினம் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். அங்கு வந்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக அலுவலகத்தில் ஓபிஎஸ் இபிஎஸ் நேரடியாக சந்தித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் நேரடியாக சந்தித்து பேசி அழைத்தால் மட்டுமே வருவோம் என்று மாவட்ட செயலாளர்கள் கூறியுள்ளனர்.

தனியே ஆலோசனை
அதே நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி தனது ஆதரவாளர்களுடன் கிரீன்வேஸ் இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர், முக்கூர் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளனர்.

தவிர்த்த எடப்பாடி
அதிமுக அலுவலகத்தில் தீர்மானக்குழுவினருடன் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர் செல்வம் திடீரென வீட்டிற்கு கிளம்பினார். எடப்பாடி பழனிச்சாமி வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் இருந்தவரைக்கும் அவர் வரவில்லை என்பதால் நேருக்கு நேர் சந்திக்க முடியாமலேயே போய் விட்டது. அதிமுகவின் ஒற்றைத்தலைமை பிரச்சினைக்கு சுமூக தீர்வு எப்போது எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications