SIR ஷாக்: திருவள்ளூரில் 6.19 லட்சம்.. நெல்லையில் 2.15 லட்சம் வாக்குகள் நீக்கம்! தென்காசியில் எவ்வளவு
சென்னை: தமிழ்நாடு முழுவதும் மாவட்ட வாரியாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் SIR பணிகள் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் இருந்து 6.19 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் நெல்லை மாவட்டத்தில் 2.15 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்காசியில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு, மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR பணிகள் நடைபெற்றது. நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய இந்த SIR பணிகள், டிசம்பர் 14ஆம் தேதி வரை நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலகர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று SIR படிவத்தை கொடுத்து, அதனை பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்றனர். இதையடுத்து பதிவேற்றம் செய்தனர்.

இவர்களுக்கு திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சியினர் உதவி செய்தனர். மொத்தமாக 6.41 கோடி படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை இன்று மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபைத் தொகுதிகளில் இருந்து 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளது.
SIR பணிகளுக்கு முன்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் 35 லட்சத்து 82 ஆயிரத்து 226 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது SIR பணிகளுக்கு பின் திருவள்ளூர் மாவட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 29 லட்சத்து 62 ஆயிரத்து 449 ஆக குறைந்துள்ளது. மொத்தமாக 6 லட்சத்து 19 ஆயிரத்து 777 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல் நெல்லையில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையாக 12 லட்சத்து 3 ஆயிரத்து 224ஆக இருந்தது. தற்போது SIR பணிகளுக்கு பின் 15.16 சதவிகிதம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன் மூலமாக மொத்தம் நெல்லை மாவட்டத்தில் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரத்து 457 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். நெல்லை சட்டமன்ற தொகுதியில் 42,119 வாக்குகளும், பாளையங்கோட்டை தொகுதியில் 36,057 வாக்குகளும், அம்பாசமுத்திரம் தொகுதியில் 42,501 வாக்குகளும், நாங்குனேரி தொகுதியில் 54,760 வாக்குகளும், ராதாபுரம் தொகுதியில் 40,020 வாக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.
அதேபோல் தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் ஆலங்குளம் ஆகிய ஐந்து சட்டசபைத் தொகுதிகளின் வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு பின் இன்று வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 12 லட்சத்து 25 ஆயிரத்து 797 வாக்காளர்கள் உள்ளனர்.
6 லட்சத்து ஆயிரத்து 787ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 23 ஆயிரத்து 852 பெண் வாக்காளர்களும், 158 மூன்றாம் பாலினத்தவரும் உள்ளனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 902 வாக்காளர்கள் இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், கண்டறிய முடியாதவர்கள் என அடையாளம் காணப்பட்டு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மொத்த வாக்காளர்களில் 11 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். வரைவு வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லையென்றால், நாளை முதல் ஜனவரி 18 வரை படிவம் 6ஐ பூர்த்தி செய்து கொடுக்கலாம். அதன்பின் இறுதி வாக்காளர் பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications