Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SIR செய்ய அதிகாரிகள் வரும் போது.. நீங்கள் வீட்டில் இல்லைன்னா என்னாகும்? வாக்காளர் அட்டையே பறிபோகுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆண்டுதோறும் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தத்தைப் போலல்லாமல், இந்த ஆண்டு தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒரு புதிய வாக்காளர் பட்டியலை உருவாக்கும் என்று இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

ECI இன் நிலைப்பாடு குறித்து வழக்கறிஞர் நிரஞ்சன் ராஜகோபாலன், தலைமை நீதிபதி மாநிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதோடு SSR மற்றும் SIR ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாடுகளை விளக்கினார். SSR ஆனது ஏற்கனவே உள்ள பட்டியலைத் தக்க வைத்துக் கொள்கிறது என்றும், பட்டியலில் சேர்க்கப்பட அல்லது நீக்கப்பட விரும்புவோர் மட்டுமே விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

voting vote

SIR என்றால் என்ன?

மாறாக, SIR முறையின் கீழ், தற்போதுள்ள பட்டியலில் உள்ள ஒவ்வொரு வாக்காளரும் ஒரு கணக்கெடுப்பு படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை ECI இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம் அல்லது பூத் நிலை அலுவலர்கள் (BLOs) மூலம் பெறலாம். BLOக்கள் ஒரு படிவத்தை பெற்றுக்கொண்டு, இரண்டாவது படிவத்தில் ஒப்புகைச் சான்றை கையொப்பமிட்டு வாக்காளர்களிடம் வழங்குவார்கள்.

வாக்காளர்கள் கணக்கெடுப்பு படிவத்தைச் சமர்ப்பிக்கும்போது வேறு எந்த ஆவணங்களையும் இணைக்கத் தேவையில்லை. கணக்கெடுப்பு படிவத்தில் உள்ள தகவல்களுக்கும் ஏற்கனவே உள்ள வாக்காளர் பட்டியல் தகவல்களுக்கும் இடையே முரண்பாடு இருந்தால் மட்டுமே கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும். BLOக்கள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்து, படிவத்தைச் சமர்ப்பிக்காததற்கான காரணங்களைக் கண்டறிவார்கள்.

புதிதாக வாக்காளராகப் பதிவு செய்ய விரும்புவோர் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு இடம் பெயர்ந்தவர்கள், தங்களின் வயது மற்றும் அடையாளத்தைச் சரிபார்க்க தேவையான ஆவணங்களுடன் ஒரு அறிவிப்பு படிவத்தையும் சமர்ப்பிக்க வேண்டும். BLOக்கள் தேவையானவர்களுக்கு விநியோகிக்க போதுமான கணக்கெடுப்பு மற்றும் அறிவிப்புப் படிவங்களை எப்போதும் வைத்திருப்பார்கள்.

ராஜகோபாலன் நீதிமன்றத்தில் தெரிவித்ததாவது, ECI அக்டோபர் 27 அன்று தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்களில் SIR நடத்தப்படும் என்று அறிவித்தது. அதிகாரிகளுக்கான பயிற்சி மறுநாளே தொடங்கியது. இந்தப் பயிற்சி நவம்பர் 3 அன்று முடிவடைந்து, நவம்பர் 4 முதல் டிசம்பர் 4 வரை கணக்கெடுப்பு நடைபெறும்.

கோரிக்கைகள் - மேல்முறையீடுகள் செய்யலாம்

வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 அன்று வெளியிடப்படும். அதன் பின்னர், நீக்கப்படுவதற்கு எதிரான கோரிக்கைகளும், சேர்க்கப்படுவதற்கு எதிரான மூன்றாம் தரப்பு ஆட்சேபனைகளும் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும். இந்தக் கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் குறித்த விசாரணைகள் டிசம்பர் 9 அன்று தொடங்கி, ஜனவரி 31, 2026 க்குள் முடிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 அன்று வெளியிடப்படும்.

எப்போது இதற்கு முன் நடத்தப்பட்டது?

அரசியலமைப்பும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இன் விதிகளும் ECI க்கு SSR மற்றும் SIR இரண்டையும் நடத்தும் அதிகாரத்தை வழங்குகின்றன என்று ராஜகோபாலன் வலியுறுத்தினார். SIR இதுவரை குறைந்தது 10 முறை நடத்தப்பட்டுள்ளது என்றும், தமிழ்நாட்டில் கடைசியாக 2002 இல் 197 சட்டமன்றத் தொகுதிகளுக்கும், 2005 இல் மீதமுள்ள 37 தொகுதிகளுக்கும் SIR நடத்தப்பட்டது என்றும் அவர் கூறினார்.

SIR இன் நோக்கம், தகுதியான குடிமக்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் விடுபடாமல் இருப்பதையும், தகுதியற்ற எவரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதாகும் என்று அவர் விளக்கினார்.

பெயர் நீக்கப்படும்

SIR-காக வழங்கப்படும் கணக்கெடுப்பு படிவத்தை பொதுமக்கள் நிரப்பிக் கொடுக்காவிட்டால் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படும்.. முகவரி மாற்றம் செய்திருந்தாலும் அவர்கள் பெயர் பட்டியலில் இடம் பெறாது என்று அர்ச்சனா பட்நாயக், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று தெரிவித்தார். அதாவது நீங்கள் ஆவணத்தை வாங்க வீட்டில் இல்லாமல் போய், அதை நிரப்பி முடியாமல் போனால் உங்கள் பெயர் நீக்கப்படும்.

ஆனால் இதில் மேல்முறையீடு செய்ய முடியும். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய தேர்தல் ஆணைய 27.10.2025 ஆம் நாளிட்ட கடிதம் எண் 23/2025-ERS (Vol.II)-இன் படி வாக்காளர் பதிவு அலுவலர் வாக்காளர்களிடமிருந்து பெறப்பட்ட அனைத்து வாக்காளர் கணக்கெடுப்பு படிவங்களையும் சேர்த்து, வரைவு வாக்காளர் பட்டியலை தயாரிப்பார்.

வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் நிரப்பப்பட்ட வாக்காளர் கணக்கீட்டுப் படிவங்களை அளிக்க இயலாத வாக்காளர் குறித்த நேர்வில், படிவம் 6 உடன் குறிப்பிடப்பட்டுள்ள உறுதி மொழி படிவத்தையும் கோரிக்கைகள் மற்றும் மறுப்புரைகளுக்கு அளிக்கப்பட்ட காலமான 9.12.2025 முதல் 8.1.2026 வரை, தங்கள் பெயரை சேர்ப்பதற்கு தாக்கல் செய்யலாம்.

1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24 ஆம் பிரிவின் கீழ், 1950 ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 24(a) பிரிவின் படி, வாக்காளர் பதிவு அலுவலரின் யாதொரு முடிவிற்கும் எதிராக, மாவட்ட நடுவரிடம் மேல்முறையீடு செய்யலாம். மேலும், முதல் மேல்முறையீட்டு அதிகாரி வழங்கிய முடிவிற்கு எதிராக, 24(b) ஆம் பிரிவின் கீழ், தலைமை தேர்தல் அதிகாரியிடம் இரண்டாம் மேல்முறையீடு செய்யலாம். இத்தகைய மேல்முறையீடுகள் 1960 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு விதிகளைச் சேர்ந்த, 27 ஆம் விதியின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்பட வேண்டும், என்று கூறி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+